/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன விலங்குகள் நடமாட்டம்; மஞ்சூர் சாலையில் உஷார்!
/
வன விலங்குகள் நடமாட்டம்; மஞ்சூர் சாலையில் உஷார்!
ADDED : மே 28, 2024 10:15 PM
மேட்டுப்பாளையம்:காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட மஞ்சூர் சாலையில், வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர், 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம்காரமடையில் இருந்து வெள்ளியங்காடு வழியாக குண்டூர், முள்ளி, மஞ்சூர், கெத்தை, பில்லுார் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இது மஞ்சூர் வழியாக ஊட்டி செல்லும் மாற்றுப்பாதை என்பதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
கடந்த சில நாட்களாக, இந்த சாலையில் வெள்ளியங்காட்டில் இருந்து மஞ்சூர் வரை யானை, மான், காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வகையில், எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என, வாகன டிரைவர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'இச்சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே செல்வதால், வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2 குழுக்கள் வாயிலாக சுழற்சி முறையில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. வனவிலங்குகளை கண்டால், பயணியர் வனத்துறையினருக்கு தகவல்தெரிவிக்க வேண்டும். வனவிலங்குகளுடன் செல்பி எடுக்கக்கூடாது' என்றனர்.