ADDED : ஜூன் 25, 2024 11:22 PM

பள்ளிக்கு புதிய கட்டடம்
சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டி வெங்கடேஸ்வரா உயர்நிலைப்பள்ளியில், 1973 --74 ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர் மற்றும் தொழிலதிபர் வேலுமணி குடும்பத்தினர் சார்பில், 1.5 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டுதல், பழைய கட்டடங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.
பணிகள் முடிந்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. தொழிலதிபர் வேலுமணி, ஊராட்சி தலைவர் சாந்தி, ராஜேந்திரன், பள்ளி நிர்வாகிகள், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
போதை விழிப்புணர்வு பேரணி
கோவை மாவட்ட எஸ்.பி., உத்தரவுபடி, நேற்று தடாகம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தடாகம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் சார்பாக, சின்னதடாகத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், பங்கேற்ற மாணவர்கள் போதை பொருளுக்கு எதிரான வாசகங்களை முழங்கினர்.
எஸ்.ஐ., ஜெயப்பிரகாஷ், எஸ்.எஸ்.ஐ., அந்தோணி, உதவி தலைமை ஆசிரியர் நிர்மலா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ரத்ததான முகாம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு சார்பில், தொப்பம்பட்டியில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமில், 55 யூனிட் ரத்தம் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவர் சிவசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா முகாமை துவக்கி வைத்தார்.
நிர்வாகிகள் தேர்வு
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகிகள் தேர்தல் திருச்சியில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஒன்றிய, மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாநிலத் தலைவராக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில துணைத்தலைவராக கோவை மாவட்டம், அன்னூரைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.