/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நோட்டீஸ்! : அனுமதியில்லாத விளம்பர பலகைகள்: கட்டட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
/
நோட்டீஸ்! : அனுமதியில்லாத விளம்பர பலகைகள்: கட்டட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
நோட்டீஸ்! : அனுமதியில்லாத விளம்பர பலகைகள்: கட்டட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
நோட்டீஸ்! : அனுமதியில்லாத விளம்பர பலகைகள்: கட்டட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
UPDATED : ஆக 30, 2024 10:51 AM
ADDED : ஆக 29, 2024 10:46 PM

கோவை : கோவை மாநகராட்சி அதிகாரிகளின் கண்காணிப்பு குறைந்ததால், நகர பகுதியில் மீண்டும் அனுமதியற்ற விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு தீர்வு காண, இரும்புச் சட்டங்களை அகற்றுவதோடு, கட்டட உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை சந்திப்புகள் மற்றும் ரோடுகளில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் எந்தவொரு விளம்பர பலகைகளும் வைக்கக்கூடாது. இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு விதிமுறைகள் வகுத்து அரசாணையே பிறப்பித்திருக்கிறது.
பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அறிவுரைகள் வழங்கியுள்ளன. ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் உள்ள விளம்பர பலகைகள் அகற்றுவது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது.
இச்சூழலில், அதிகாரிகளின் கண்காணிப்பு குறைந்ததும் கோவை மாநகராட்சி பகுதியில் மீண்டும் மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. அவிநாசி ரோட்டில் மாநகராட்சி எல்லை பகுதியான கோல்டுவின்ஸ், ஹோப்ஸ் காலேஜ், பீளமேடு பகுதியில் ஏற்கனவே விளம்பர பலகைகள் எடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல், ஸ்டேட் பாங்க் ரோட்டில் எஸ்.பி., அலுவலகம் எதிரே ஓட்டல் சுவற்றில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்ற, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''அனுமதியற்ற விளம் பர பலகைகள் வைக்க இடம் தரும் கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படும். குறிப்பிட்ட அவகாசத்துக்குள் தாமாக முன்வந்து அகற்றாத பட்சத்தில், இரும்புச் சட்டங்களுடன் விளம்பர பலகைகள் அகற்றப்படும்,'' என்றார்.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் விளம்பர பலகைகளை அகற்றினாலும், இரும்புச் சட்டங்களை இன்னொரு நாள் அகற்றலாம் என திரும்பி விடுகின்றனர்.
அதன்பின் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் மீண்டும் வைக்கப்படுகின்றன. மாநகராட்சியின் உத்தரவை மீறும் கட்டட உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்கட்டடங்களுக்கு வழங்கியுள்ள குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டித்தால், அக்கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நடவடிக்கை மீது அச்சம் வரும். இல்லையெனில் மீண்டும் மீண்டும் வைப்பதை அதிகாரிகளால் தடுக்கவே முடியாது.