ADDED : ஜூலை 23, 2026 05:22 PM
கோவை: கால்நடை பராமரிப்பு துறையை ‘டிஜிட்டல்’ மயமாக்கும் வேலைகள் நடக்கின்றன. அதன்படி, தேசிய ‘டிஜிட்டல்’ கால்நடை திட்டத்தில் கால்நடை உரிமையாளர்களின் விபரங்கள், ஜூன் முதல் பதிவு செய்யப்படுகிறது.
கால்நடைகளின் 12 இலக்க காது குறி எண், செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், மின்னணு தகவல் வாயிலாக மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
கால்நடை உரிமையாளர்களின் மொபைல் போன் எண், ஆதார் எண் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பெறப்படும் ஓ.டி.பி., வாயிலாக பதிவுகள் நடக்கின்றன.
இதனால் கால்நடை கொள்முதல், விற்பனை ஆகிய சமயங்களில் முழு விபரங்களை கால்நடை வளர்ப்போர் அறிந்து கொள்ளலாம். மாவட்டத்தில் 110 மருந்தகங்கள் உள்ளன.
கால்நடை உரிமையாளர்கள் அந்தந்த எல்லைக்குட்பட்ட மருந்தகங்களில் ஆதார் எண், மொபைல் எண், வார்டு எண் விபரங்களை கட்டாயம் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
