/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயானத்தை சுத்தப்படுத்திய ஊராட்சி
/
மயானத்தை சுத்தப்படுத்திய ஊராட்சி
ADDED : மே 10, 2024 11:06 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, செக்போஸ்ட் பகுதியில் உள்ள மயானம் குப்பை கிடங்காக மாறி இருந்தது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்டதால், உடனடியாக சுத்தம் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு, செக்போஸ்ட் பகுதியில் இ.பி., அலுவலகம் அருகே உள்ள இடத்தில், 87 சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை, 100 ஆண்டுகளுக்கும் மேல் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நாளடைவில் இந்த மயானம் சிறிது சிறிதாக வாகனங்கள் 'பார்க்கிங்' பகுதியாகவும், குப்பை கிடங்காகவும் மாறியது. இதனால், இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய செல்பவர்கள் சிரமப்பட்டனர்.
இப்பகுதி முழுவதும் குப்பை கிடங்காக மாறி இருப்பதால், குப்பையை அகற்றிய பின் குழி தோண்டி, சடலத்தை அடக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், இறந்தவர்கள் நினைவாக கட்டப்பட்ட சமாதியும் இடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக, வடபுதுார் ஊராட்சி நிர்வாகம், பொக்லைன் வாகனம் கொண்டு, மயானத்தை சுத்தம் செய்தது.
மக்கள் கூறுகையில், 'நீண்ட காலமாக மயான இடத்தில் குப்பை குவிக்கப்பட்டு வந்தது. பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சுகாதாரம் பாதித்தது.
தற்போது, மயானம் சுத்தம் செய்யப்பட்டு, குப்பை அகற்றப்பட்டுள்ளது. மயானத்தை சுற்றிலும் 'பென்சிங்' அமைத்தால், குப்பை கொட்டப்படுவதையும், இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதையும் தடுக்க இயலும்.
எனவே, ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.