/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரங்குகளுக்கு உணவளிப்போரை கண்காணிக்க ரோந்து
/
குரங்குகளுக்கு உணவளிப்போரை கண்காணிக்க ரோந்து
ADDED : ஜூன் 10, 2024 11:23 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் குரங்குகளுக்கு உணவளிப்போரை கண்காணிக்க வனத்துறை சார்பில், ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் - -கோத்த கிரி சாலை வழியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தினமும் பல நூறு பயணிகள் சுற்றுலா செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள், சாலையோரங்களில் உள்ள இடங்களில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும், உணவு சாப்பிடவும் வாகனங்களை நிறுத்துகின்றனர். சிலர் சாலையோரம் சுற்றி திரியும் குரங்களை பார்க்கவும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இவர்களில் சிலர் தங்களது வாகனத்திற்கு அருகில் வரும் குரங்களுக்கு உணவளிக்கின்றனர். இதனை சாப்பிட குரங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால், சாலையில் சுற்றி திரியும் குரங்குகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். வனச்சட்டத்தின் படி குரங்களுக்கு உணவளிக்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், 'குரங்களுக்கு உணவளிப்போரை கண்காணிக்க வனத்துறை சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வனச்சட்டத்தின் படி குரங்களுக்கு உணவளிக்கக்கூடாது. குரங்களுக்கு இயற்கையாகவே வனத்திற்குள் உணவு கிடைக்கும். இவ்வாறு மக்கள் உணவளிப்பதால் குரங்கள் வனத்துக்குள் செல்லாமல் சாலையிலேயே சுற்றி திரிகின்றன.
இதனால் விபத்தில் சிக்கி குரங்குகள் காயம் அடையவும், உயிரிழக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. குரங்குகளுக்கு உணவளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.---

