/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் 'கேரி பேக்' கூடாது! வனம் காக்க அறிவுரை
/
பிளாஸ்டிக் 'கேரி பேக்' கூடாது! வனம் காக்க அறிவுரை
ADDED : ஜூன் 25, 2024 08:40 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் போட வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள், மான்கள், காட்டு மாடுகள், சிறுத்தை, புலி, என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, கோவில் யானைகளின் புத்துணர்வு முகாம் நடந்தது.
இப்பகுதி அருகே உள்ள பவானி ஆற்றில் குளிக்க வரும் பொதுமக்கள், எதிரேவுள்ள வனப்பகுதி ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். குளித்த பின், சாலையின் ஓரத்தில் உள்ள, மர நிழலில் அமர்ந்து, ஓய்வு எடுத்தும், சாப்பிட்டும் வருகின்றனர். அதனால் இப்பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன.
இவர்கள் கொண்டு வரும் தின்பண்டங்கள், உணவுப் பொருட்களை சாப்பிட்ட பின், மீதம் உள்ள உணவு பொருட்களையும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளையும், வனப்பகுதியிலேயே அப்படியே போட்டு செல்கின்றனர். மாலை மற்றும் இரவில் ஆற்றுக்கு தண்ணீர் குடிக்க வரும் யானைகள், மான்கள், மீதமான உணவுப் பொருட்களை சாப்பிடுகின்றன.
மேலும் அங்கு கிடக்கும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை வனவிலங்குகள் சாப்பிட வாய்ப்பு உள்ளது.
மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின், குப்பைகளை சுத்தம் செய்து, தூய்மையாக வைக்க வேண்டும் என, வனப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை, போட வேண்டாம் என, பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும்படியும், வனப்பணியாளர்களுக்கு, அறிவுறுத்தினார்.