/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: பொள்ளாச்சியில் துவங்கியது
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: பொள்ளாச்சியில் துவங்கியது
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: பொள்ளாச்சியில் துவங்கியது
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: பொள்ளாச்சியில் துவங்கியது
ADDED : ஏப் 02, 2024 10:26 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம், 1ம் தேதி துவங்கி, 22ம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக மாநிலம் முழுவதும் கல்வி மாவட்டம் வாரியாக விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்யப்பட்டது.
அதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடைத்தாள் திருத்தும் மையமாக தேர்வு செய்யப்பட்டது.இதனையடுத்து, நேற்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலரும், முகாம் அலுவலருமான கேசவகுமார், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் முதுநிலை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
முகாம் அலுவலர் முன்னிலையில், அறையிலிருந்து விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. முதல் நாளான நேற்றுமுன்தினம் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டனர். முகாம் எழுத்தர் கமலக்கண்ணன் மற்றும் அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்தனர்.
கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது. முகாமில், மொத்தம், 61,453 விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. முதன்மை தேர்வாளர்கள், 68 பேர், கூர்ந்தாய்வாளர்கள், 68 பேர், உதவித்தேர்வாளர்கள், 405 பேர் மற்றும் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.
விடைத்தாள்களை துல்லியமாகவும், சரியாகவும் திருத்த வேண்டும். மதிப்பெண்கள் விடுபட்டு விடக்கூடாது; பொறுமையாக திருத்த வேண்டும்.
உதவித்தேர்வாளர்கள் திருத்துவதை கூர்ந்தாய்வாளர்கள், முதன்மை தேர்வாளர்கள் சரிபார்க்க உள்ளனர். அதன்பின், கணினியில் மதிப்பெண் பதிவு செய்யப்படும். இப்பணிகளை வரும், 12ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

