ADDED : ஜூலை 26, 2026 07:11 PM
மேட்டுப்பாளையம்: ‘‘தினமும் புத்தகம் வாசித்தால், மொழி ஆளுமை, சிந்தனை ஆற்றல் வளரும்’ என, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, பெருந்திரள் புத்தக வாசிப்பு நடந்தது. பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார். பள்ளி செயலர் கவிதாசன் பேசுகையில், ‘‘வாசிப்பு என்பது தேர்வுக்காக மட்டும் படிப்பது அல்ல. வாசிப்பில், அறிதல், புரிதல், சிந்தித்தல், உணர்தல், செயல்படுத்துதல் என, ஐந்து நிலைகள் உள்ளன. படித்ததை வாழ்வில் செயல்படுத்துவதே முழுமையான அறிவு. படிப்பதில் நல்ல கருத்தை உடனடியாக வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். சாதனையாளர்களை செதுக்கியது புத்தகங்களே. படித்ததன் சாராம்சத்தை வாழ்வில் பயன்படுத்தினால், வெற்றியை அடையலாம்,’’ என்றார்.
தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் ஞானசேகரன் பேசுகையில், ‘‘தினமும் குறிப்பிட்ட நேரம் புத்தகம் வாசிப்பதால், நல்லொழுக்கம், தொடர் கற்றல், மொழி ஆளுமை, கற்பனை திறன் மற்றும் சிந்தனை ஆற்றல் வளரும். அதிக தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், படிப்பால் மட்டுமே பாரதத்தை உயர்த்த முடியும் என்றார். கம்பனின் செய்யுள், பாரதியின் பாட்டு, வள்ளுவரின் குறள் போன்றவை வாழ்க்கையை உயர்த்தும் என்பதை, மாணவர்கள் உணர்ந்து வாசிக்க வேண்டும். வாசிப்பின் முக்கியத்துவத்தை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்,’’ என்றார்.
காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் சதீஸ்குமார், மாணவர்கள் யுவந்த் ரங்கராஜன், ராஜேஸ்வரி, மிதுன் ஆகியோர் பேசினர். பள்ளி துணை முதல்வர் சக்திவேல், டாக்டர் ஷீலாகிரேஸ், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மாணவன் சண்முகநாத் நன்றி கூறினார். ஏற்பாடுகளை, பள்ளி வாசிப்பு மன்ற பொறுப்பாசிரியர்கள் மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
