ADDED : ஜூன் 23, 2024 11:32 PM
பஸ் எங்கே நிற்கும் என தெரியாது
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இருவர், காலாவதி பஸ்களால், போக்குவரத்து கழகத்துக்கு ஏற்படும் இழப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தனர். என்ன விஷயம்னு கவனம் செலுத்தினேன்.
அரசு போக்குவரத்துக்கழகம் பொள்ளாச்சி பணி மனைகளில் 43 டவுன் பஸ்கள் இருக்கு. சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு இந்த பஸ்கள் தினமும் இயக்கப் படுது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர், பணி நிமித்தமாக செல்லும் மக்கள் என பலரும் பயனடைந்து வருகின்றனர்.
ஆனா, பெரும்பாலான டவுன் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாம இருக்கு. குறிப்பாக, ஆறு பஸ்கள் காலாவதியான நிலையிலும், வரி மட்டும் செலுத்தி இயக்கிட்டு இருக்காங்க. அவ்வப்போது மக்கர் ஆகும் பஸ்கள் நடுவழியில் நின்று விடுவதால், பயணியர் பாதியிலேயே இறக்கி விடப்படுகின்றனர்.
சமீபத்தில், ஆத்துப்பொள்ளாச்சிக்கு இயக்கப்பட்ட பஸ் நடு வழித்தடத்துல திடீரென நின்று விட்டது. பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். காலாவதி பஸ்களை இயக்காமல், மாற்று பஸ்களை வழித்தடத்தில் இயக்க வேண்டும். காலாவதி பஸ்களால் போக்குவரத்துக்கு கழகத்துக்கும் அதிக செலவாகும், மைலேஜ்யும் கிடைக்காதுனு, பேசிக்கிட்டாங்க.
விதிமீறினா தப்பில்லீங்களா சார்!
கார், பைக்குகளில், பதிவு எண்ணை டிசைன் டிசைனா எழுதறாங்க. நம்பர் பிளேட்டில், வாசகம், படம், ஸ்டிக்கர் ஒட்டியிருக்காங்க. என்ன நம்பர் எழுதி இருக்காங்கணு கண்ணுக்கு தெரியவே மாட்டீங்குது.
தமிழ்நாட்டுல சமீபத்துல, பைக், கார் நம்பர் பிளேட்ல, பதிவு எண் மட்டும் தான் இருக்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டிருக்கு. ஆனா, இப்ப வரைக்கும் அந்த உத்தரவு அமல்படுத்தப்படுல.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில, அரசு அதிகாரிகளே அவங்களோட பைக்ல, ரெவென்யு, போஸ்டல், போலீஸ்னு ஸ்டிக்கர் ஒட்டியிருக்காங்க. அரசு உத்தரவிட்ட பிறகும், யாருடைய வாகனத்திலும் ஸ்டிக்கர் அகற்றப்படவில்லை.
பொதுமக்களோட வாகனத்துல டிசைனா நம்பர் எழுதியிருந்தா, இப்படி எழுத கூடாதுனு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தறாங்க. வாகன சோதனை செய்யும் போது, அபராதம் கூட விதிக்கறாங்க.
ஆனா, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் வாகனத்தில், நம்பர் பிளேட்ல பணியாற்றும் துறையின் பெயரை ஸ்டிக்கரா ஒட்டி, விதிமீறியிருக்காங்க. இதை போக்குவரத்து அதிகாரிகள் கண்டுக்காம இருக்காங்கனு, நண்பர் வேதனையோடு கூறினார்.
'கல்லா' கட்ட மட்டும் ஆர்வமிருக்கு
உடுமலை நேதாஜி மைதானம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமானது. ஆனால், பள்ளி தளி ரோட்டுல இருக்குறதால, அந்த பள்ளி பசங்க ரெகுலரா மைதானத்துக்கு வர்றது இல்லை.
டவுனுக்குள்ள இருக்கறதால, எல்லா லீவ் நாட்களிலும், கிரிக்கெட், புட்பால் என அனைத்து விளையாட்டுகளுக்கும் தனியார் சார்பில் டோர்னமென்ட் நடத்துறாங்க.
பெரிய மைதானமா இருக்கறதால, எல்லா ஊர்ல இருந்தும் அணிகள் வந்து விளையாடுறாங்க. இதுல, போட்டி நடத்தறவங்க, நுழைவு கட்டணம், ஸ்பான்ஸர் அப்படின்னுநல்லா வருமானம் பார்க்கறாங்க.
அவங்க இஷ்டத்துக்கு பந்தல் போடுறது; பிளக்ஸ் வைக்கறதுன்னு சொந்த மைதானம் மாதிரி பயன்படுத்துறாங்க. ஆனா, ஸ்கூலுக்கும், மைதானத்துக்கும் எந்த உதவியும் செய்யறது கிடையாது. டோர்னமென்ட் முடிஞ்சதும், மைதானம் முழுக்க குப்பை சிதறி கிடந்தாலும் சுத்தம் செய்யறது கிடையாது.
போட்டி நடத்தறதுக்கு தடை போடலாம்னு நினைச்சா, உடனே அரசியல்வாதிகள் உள்ளே வந்து, பிரஷர் கொடுக்கறாங்க. வருமானத்துக்கும், விளையாட்டுக்கும் உதவற மைதானத்தை, நல்லபடியா மெயின்டென் பண்ண யாருக்கும் மனசில்லை.
இதையெல்லாம் தடுக்க, மைதானத்தை பயன் படுத்தறவங்க, மைதான மேம்பாட்டுக்கும், பள்ளிக்கும் உதவி செய்யற மாதிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவு போடணும்னு, விளையாட்டு ஆர்வலர்கள் கவலையோடு சொன்னாங்க.
இஷ்டத்துக்கு இல்லீகல் கனெக் ஷன்
குடிமங்கலம் நால்ரோடு சந்திப்புல, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ரெண்டு பேர், குடிநீர் பிரச்னைக்காக பட்டிமன்றம் போடாத குறையா பேசிக்கிட்ட இருந்தாங்க. அவங்க சொன்னதில் இருந்து...
திருமூர்த்தி டேமிலிருந்து கிராமங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் எடுத்தாலும், குடிமங்கலம் யூனியன் கடைக்கோடி கிராமங்களுக்கு குடிநீரே கிடைக்கறதில்லை.
பிரதான குழாய் வழித்தடத்திலுள்ள பல கிராமங்களில், புதுசா போட்ட லே - அவுட்களுக்கு இல்லீகலா அதிக கனெக் ஷன் எடுத்துள்ளது தான் பிரச்னை என மக்கள் பிரதிநிதிகள் பல வருஷமாக கத்தியும் பலனில்லை.
கடைசிக்கு, வாட்டர் மீட்டரை செக் பண்ணி, அதிகமாக தண்ணீர் எடுக்கறவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்னு மீட்டிங்ல கோரிக்கை வைக்கறாங்க.
இதுக்கு வாட்டர்போர்டு அதிகாரிங்க ஆய்வுக்கு போனாலும், எங்களுக்கு மாவட்ட அமைச்சரை தெரியும்னு சில பஞ்சாயத்து நிர்வாகத்துலமிரட்டுறாங்களாம். ஆளாளுக்கு இதே 'டயலாக்' சொல்வதால்,மக்கள் கிட்டயும், யூனியன் கவுன்சிலர்கள்கிட்டயும் அதிகாரிங்க திட்டு வாங்கறாங்க.
இப்படியே பிரச்னை தொடர்கதையாச்சுனா கிராமத்துல குடிநீர் பஞ்சம் ஏற்படும். பாரபட்சம் இல்லாம, ரூல்ஸ்படி குடிநீர் வினியோகிக்க திருப்பூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்காட்டி, வர்ற எலக் ஷன்ல போட்டி போட முடியாத அளவுக்கு நிலைமை மோசமாயிரும்னு புலம்பினர்.
வைரல் ஆனது வி.ஏ.ஓ., ஆடியோ
மடத்துக்குளம் தாலுகா, சங்கராமநல்லுார், குதிரையாறு ஆற்றுப்பாலம் பகுதியில, விழுப்புரத்திலிருந்து கரும்பு வெட்ட அழைத்து வரப்பட்டவர்களை கொத்தடிமையாக நடத்துவதாக புகார் வந்தது.
கொத்தடிமை தம்பதியின் மகள், தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக, உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் மனு ஒன்றும் கொடுத்தார்.
கோட்டாட்சியரும், அக்கிராம வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் கொடுத்து, தம்பதியரை மீட்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனா, சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர், கொத்தடிமையாக தொழிலாளிகளை வைத்துள்ள, சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு புகார் குறித்து தகவல் கொடுத்துட்டாங்க.
அதுமட்டுமின்றி, அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்ட பகுதிக்கு தொழிலாளர்களை அழைத்துச்சென்று தங்க வைக்குமாறு, 'ஐடியா'வும் கொடுத்துட்டாங்க.
இதனால அதிர்ச்சியடைந்த கொத்தடிமை மீட்பு குழுவினர், மடத்துக்குளம் நீதிமன்றத்தில், வட்ட சட்ட பணிகள் குழு வாயிலாக மனு அளித்தனர். நீதிபதி உத்தரவை தொடர்ந்து, கொத்தடிமை தம்பதியர் மீட்கப்பட்டனர்.
கொத்தடிமை மீட்பதில் 'மாமூல்' விவகாரமும், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., 'ஆடியோ'வும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.