ADDED : மார் 06, 2025 11:39 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், ரோட்டின் நடுவே மீடியனில் படிந்து இருந்த மண்ணை அகற்றும் பணியில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் இருந்து, பிரதான நகரங்களுக்கு செல்லும் சாலை, அடுத்தடுத்து அகலப்படுத்தப்பட்டு, ரோட்டின் நடுவே மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், நகரைச் கடந்து செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் நான்கு வழிச்சாலையாக மாறியுள்ளது.
சமீப காலமாக, மீடியன் ஓரத்தில் புழுதி மண் படிந்த நிலையில் காணப்பட்டது. கனரக வாகனங்கள் செல்லும் போது, புழுதி பறந்ததால், பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் பாதிப்படைந்தனர்.
இது குறித்து, 'தினமலர்'நாளிதழில் செய்தி வெளியானது. அதன்பேரில், மீடியனில் படிந்துள்ள மண்ணை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, படிந்து நிற்கும் மண்ணை குவித்து, அப்புறப்படுத்தி வருகின்றனர். நேற்று, கோட்டூர் ரோடு, ரயில்வே மேம்பாலத்தில் மண் மற்றும் குப்பைகளை சேகரித்து, அப்புறப்படுத்தினர். இதனால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்தனர்.