/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிதிலமடைந்த ரேஷன்கடை: அச்சமடையும் பொதுமக்கள்
/
சிதிலமடைந்த ரேஷன்கடை: அச்சமடையும் பொதுமக்கள்
ADDED : ஜூலை 19, 2024 05:05 PM

உடுமலை : போடிபட்டி ஊராட்சி சுண்டக்காபாளையம் ரேஷன் கடை, சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
உடுமலை ஒன்றியம், போடிபட்டி ஊராட்சி சுண்டக்காம்பாளையத்தில், கூட்டுறவு துறையின் கீழ் ரேஷன் கடை செயல்படுகிறது. இப்பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் இந்த கடையை பயன்படுத்துகின்றனர்.
இக்கடையின் கட்டமைப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருவதால், மக்கள் அச்சத்துடன் பொருட்கள் வாங்கச்செல்கின்றனர். ரேஷன் கடையின் கட்டடம் கடந்த ஓராண்டாக மேற்கூரை முழுவதும் சேதமடைந்துள்ளது.
தற்போது கட்டடமும் விரிசல் விட்டு இடிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க தயங்குகின்றனர். பொருட்களுக்கும் பாதுகாப்பில்லாமல் உள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ரேஷன் பொருட்கள் வாங்க செல்வதென்றாலே பயமாகத்தான் உள்ளது. மேற்கூரை சிறிது சிறிதாக பெயர்ந்து கீழே விழுகிறது. மழை நேரங்களில் இங்கு செல்லவே பதட்டமாக உள்ளது.
கடையை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும். சிதிலமடைந்துள்ள கட்டடத்தை அப்புறப்படுத்தி, வேறு புதிய கட்டடம் கட்டுவதற்கு, கூட்டுறவுத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.