/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் ஓட்டுகளை எண்ண ஆறு குழுக்கள் தயார்!
/
தபால் ஓட்டுகளை எண்ண ஆறு குழுக்கள் தயார்!
ADDED : மே 02, 2024 06:57 AM
கோவை : கோவை லோக்சபா தொகுதிக்கு பதிவான தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு, பிரத்யேகமாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், ஜூன் 4ல் எண்ணப்படுகின்றன.
சட்டசபை தொகுதி வாரியாக, ஆறு அறைகள் ஒதுக்கப்பட்டு, மேஜைகள் போடப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணுவதற்கு தேவையான ஊழியர்களை, அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி அறைக்கு அருகில் உள்ள கருத்தரங்கு ஹால் ஒதுக்கப்பட்டு, மேஜைகள் போடப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைத்துறை (நில எடுப்பு) சிறப்பு டி.ஆர்.ஓ., அபிராமி, நோடல் ஆபீசராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு உதவியாக, சிறப்பு தாசில்தார் (ஸ்டாம்ப்ஸ்) லாவண்யா நியமிக்கப்பட்டு இருக்கிறார். தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், போலீசார், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு செலுத்தியுள்ளனர். இவர்கள் தவிர, கோவை தொகுதியை சேர்ந்த, பிற மாவட்டங்களில் பணிபுரியக் கூடிய அரசு அலுவலர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.
தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு மட்டும் துணை கலெக்டர்கள் தலைமையில் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளராக ஒரு தாசில்தார், ஓட்டுகளை எண்ணுவதற்கு உதவியாளராக ஒருவர் என மூன்று பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தவிர, ராணுவ வீரர்கள் செலுத்திய, 'சர்வீஸ் ஓட்டு' எண்ணுவதற்கு பிரத்யேகமாக, மூன்று அதிகாரிகளை நியமித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

