/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடையின் நின்றுயர் நாயகன் ஸ்ரீராமர்! ஆன்மிக விழாவில் பேச்சு
/
நடையின் நின்றுயர் நாயகன் ஸ்ரீராமர்! ஆன்மிக விழாவில் பேச்சு
நடையின் நின்றுயர் நாயகன் ஸ்ரீராமர்! ஆன்மிக விழாவில் பேச்சு
நடையின் நின்றுயர் நாயகன் ஸ்ரீராமர்! ஆன்மிக விழாவில் பேச்சு
ADDED : ஜூலை 02, 2024 02:11 AM

உடுமலை;எல்லா நிலைகளிலும், என்றும் அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ்பவர் ஸ்ரீராமர் என ஆன்மிக சொற்பொழிவாளர் சுபாசு சந்திரபோசு பேசினார்.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை விழா மன்றம் சார்பில், கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் சுபாசு சந்திரபோசு பேசியதாவது:
நமது பாரதம், ஞான பூமியாக திகழ முழு முதற்காரணமாக, ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் உள்ளன. 'ரகுபதி ராகவ ராஜாராம்; பத்த பாவன சீதாராம்; என்ற தாரக மந்திரமே காந்தியை, வழிநடத்திச்சென்றது.
ராமாயணத்தில் அனைத்து வகை வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது. வாக்கு கொடுத்து விட்டு தடுமாறும் சகோதரர்கள், பாசம் காட்டி மோசம் செய்பவர்கள் என ராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட பாத்திரங்கள், இன்றும் நாட்டில் உலா வருகின்றனர்.
ஆனால், ராமர்களும், சீதைகளும் அரிதாகவே உள்ளனர். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும், ராமனாக, சீதையாக மலரும் வரை, ராமாயணம் படிக்கப்பட வேண்டும்; சொல்லப்பட வேண்டும்; கேட்கப்பட வேண்டும்.
'கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ,' என்பார் ஞானி நம்மாழ்வார். 'ராம' என்ற ஈரெழுத்து மந்திரம், மந்திரங்களுக்கெல்லாம் மூல மந்திரம். தாய் மந்திரம்; தாரக மந்திரம். நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்தின் இரண்டாவது எழுத்து 'ரா'. இதுதான் இம்மந்திரத்தின் பீஜ அட்சரம்; அதன் உயிர்.
'நமசிவாய' பஞ்சாட்சரத்தின் இரண்டாவது எழுத்து 'ம'; இதுதான் அம்மந்திரத்தின் உயிர். இந்த இரு எழுத்துகளும் இணைந்துதான், 'ராம', என்ற சிவ, விஷ்ணு சக்தி நிறைந்த தாரக மந்திரம் உருவானது.
பதினாறு நற்குணங்களும் பூரணமான புருேஷாத்தமன் யார்? என்ற வால்மீகியின் கேள்விக்கு அப்புருேஷாத்தமன் ராமனே என்றார் நாரத மகரிஷி. நடையின் நின்றுயர் நாயகன் என ராமபிரானை கம்பர் சிறப்பிப்பார்.
நடை என்றால் நடத்தையாகும். நல்ல குழந்தை, மகன், சகோதரன், கணவன், நண்பன், எதிரி என அனைத்து பருவங்களிலும், எல்லா நிலைகளிலும், என்றும் எவர்க்கும் வழிகாட்டி வருபவர் ஸ்ரீ ராமரே நடையின் நின்றுயர் நாயகன் ஆவார்.
இவ்வாறு, அவர் பேசினார்.