/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர் சாகுபடிக்கு மானியம் ;வேளாண் துறை அறிவுரை
/
பயிர் சாகுபடிக்கு மானியம் ;வேளாண் துறை அறிவுரை
ADDED : மே 12, 2024 10:51 PM
கிணத்துக்கடவு:கோவை மாவட்டத்தில், கோடை கால பயிர் சாகுபடிக்கு வேளாண் துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், இறவையில் குறைந்த நீர் தேவையுள்ள பயிர்களான, தானியங்கள், பயறு வகைகள் மற்றும் நிலக்கடலை, எள் போன்றவைகள் சாகுபடி செய்யப்படுகிறது.
கோவையில், இந்த ஆண்டு கோடையில், தானியங்கள் -1,425 ஹெக்டேர், பயறு வகைகள், 330 ஹெக்டேர், நிலக்கடலை 1,000 ஹெக்டேர் மற்றும் எள், 300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விதைப்புக்கு தேவையான பயறு வகை மற்றும் நிலக்கடலை விதைகளுக்கு, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 10 மற்றும் 15 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு, 50 சதவீதம் மானியத்தில் விதைகள், வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது.
சான்று பெற்ற விதைகளுடன் கலந்து விதைக்க தேவையான உயிர் பூஞ்சை கொல்லிகளான, டிரைகோகிரம்மா விரிடி, சூடோமோனாஸ் புளுரசென்ஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்களை வழங்கக்கூடிய நுண்ணூட்டங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
பயிறுவகைகளுக்கு ஹெக்டேருக்கு 5 கிலோ மற்றும் நிலக்கடலைக்கு 12.5 கிலோ நுண்ணூட்டம் இடவேண்டும்.
விவசாயிகள் கூடுதல் தகவல் அறிய உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகவலை, வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.