ADDED : மார் 22, 2024 08:36 PM

எங்கும் தொழில்நுட்பம், எதிலும் தொழில்நுட்பம். தொழில்நுட்பம் இல்லாமல், இன்று நாம் வாழும் இந்த உலகம் ஒருபோதும் சாத்தியமில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
வீட்டுவசதி, விவசாயம், மின்சாரம், மருத்துவம், ஆளுமை, பாதுகாப்பு, கல்வி போன்ற ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தைக் காண்கின்றோம். ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது அல்லது எப்படி பயன்படுத்தலாம் என்பது அறிய கல்வி அவசியம். அந்தக் கல்வித்துறையிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு எந்தளவுக்கு உள்ளதை என்பதை பார்க்கலாம்.
இன்றைய 2கே குழந்தைகள் பிறக்கும் பொழுதே தொழில்நுட்ப அறிவுடன் பிறக்கின்றன. சிறு வயது முதலே ஸ்மார்ட் போன் முதல் இணையதள பயன்பாடுகள் வரை தாங்களாகவே கற்றுக் கொள்கின்றனர்.
இதுவே தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எனலாம். வயது வரம்பின்றி அனைவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
இத்தொழில்நுட்ப வளர்ச்சியினால் கற்றலும் அனைவருக்கும் சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது.
கோவிட் காலகட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் இரண்டு வருடம் கல்வி கற்றுத் தந்தன என்பதே இதன் மிகப்பெரிய சாதனை. இதனால் ஆன்லைன் வழிக் கல்வியும், ஆன்லைனில் சான்றிதழ் படிப்புகளும் பெருகிவிட்டன.
மருத்துவம் சார்ந்த படிப்பிலிருந்து பாட்டு, பரதம் வரை ஆன்லைனிலேயே கற்றுக் கொள்ளும் வசதி வந்துவிட்டது.
வீடியோக்கள், படங்கள், கிராபிக்ஸ் என அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாடங்களை கற்கின்றனர். மேலும் எந்த ஒரு மொழியையும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கற்றுக் கொள்ளலாம்.
வேற்று மொழி சொற்களை உச்சரிப்பதும், அதனுடைய அர்த்தத்தை தெரிந்து கொள்வதும் எளிதாகிவிட்டது. இ- லேர்னிங் மாணவர்களுக்கு அவர்களின் படிப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் எளிதாக அணுக உதவுகிறது. இது மாணவர்களின் எல்லையை விரிவுபடுத்தி உலகளவில் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு
ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களுடனும் தனித்தனி கவனத்துடன் கற்றுக் கொடுக்க முடிகிறது.
குறிப்பாக கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இம்முறை பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைகளின் தனித்திறனைக் கண்டறிந்து அவர்களுக்கேற்ற பயிற்சியளிக்க இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
வகுப்பறை கல்வியை இது எளிதாக்குகிறது. இது கற்றல்-கற்பித்தல் முறையை பயனுள்ளதாக்குகிறது. நெகிழ்வான கற்றல் சூழலை இது உருவாக்கித் தருகிறது. மேலும் தொலைதூரக் கற்றலை செயற்கை நுண்ணறிவு எளிதாக்குகிறது.
ஆக்மெண்ட் ரியாலிட்டி
இந்த தொழில்நுட்பம், பொறியியல், உற்பத்தி, விண்வெளி, இணையதளம், சுகாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆக்மெண்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதில் சிறிய படங்களை பெரிதுபடுத்திக் காட்டவும், ஆழமாக சென்று தெளிவாக, துல்லியமாக பார்க்கவும் முடிகிறது.
ஆன்லைன் வகுப்புகளில் இத்தொழில்நுட்பத்தின் உதவியோடு பாடங்கள் நடத்தப்படுகின்றன. இது மாணவர்கள் கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளவும், ஆர்வத்துடன் பயிலவும் உதவுகிறது. மாணவர்கள் வரலாற்று நிகழ்வுகளை ஆராயலாம், புவியியல் தளங்களைப் பார்வையிடலாம் மற்றும் அறிவியல் நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டு அனுபவங்கள் மூலம் சிறந்த கற்றலை பெறலாம்.

