ADDED : மார் 22, 2024 08:58 PM

மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே திருப்பணிகள் முடிந்த மாகாளியம்மன், பட்டத்தரசி அம்மன், மீனாட்சி அம்மன், முனியப்பன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம், 25ம் தேதி நடக்கிறது.
சிறுமுகை அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையத்தில் மாகாளியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடந்தன.
புதிதாக பட்டத்தரசி அம்மன், மீனாட்சி அம்மன், முனியப்பன் ஆகிய சுவாமிகளின் சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து திருப்பணிகளும் முடிந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் விழா துவங்குகிறது. இன்று மாலை புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, எண் திசை காவலர் வழிபாடு ஆகியவை நடக்கின்றன.
நாளை, பவானி நதியில் இருந்து, புனித நீர் எடுத்து வருதல், விமான கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல், முதல் கால வேள்வி பூஜை துவக்கம் ஆகியவையும், 25ம் தேதி காலை சுவாமிகளின் திருமேனிகளுக்கு காப்பு அணிவித்தல், இரண்டாம் கால வேள்வி பூஜை ஆகியவை நடக்கின்றன.
தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கருவறை மூர்த்திக்கு, அருள் நிலை ஏற்றதல், பேரொளி வழிபாடு நடக்கின்றன.
காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள், கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.
கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை சிரவை ஆதினம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் ஆகியோர் தலைமையில், சிறுமுகை தியானக் கூட சாந்தலிங்கர் அருள்நெறி மன்ற ரங்கசாமி குருசாமி, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளார்.
ஜெயபிரகாஷ், வேள்வி வழிபாடு செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

