ADDED : ஆக 01, 2024 10:33 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, காளியண்ணன்புதூர் பஸ் ஸ்டாப்பில் உள்ள பயணியர் நிழற்கூரை மது பானம் அருந்தும் கூடாரமாக மாறியிருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, கோவில்பாளையம் ஊராட்சி உட்பட்ட காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே நிழற்கூரை உள்ளது. பஸ் வரும் வரை, நிழற்கூரையில் பள்ளி மாணவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
பள்ளி அருகே ஏராளமான குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளதால், இப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அப்பகுதி மக்கள் பலர் நிழற்கூரையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நிழற்கூரையில் இரவு நேரத்தில், சில சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்துவது, காலி மது பாட்டில்களை அங்கேயே வீசி செல்வது, பிளாஸ்டிக் டம்ளர், உணவு பொட்டலங்களை விட்டு செல்கின்றனர். இதனால், நிழற்கூரை 'பார்' போன்று மாறி, மது கூடாரமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நிழற்கூரை எதிரே பள்ளி இருப்பதால், மாணவர்கள் மனநிலை பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி நிழற்கூரையில் மது அருந்துபவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போன்று, தேவராயபுரம் ஊராட்சி, வேலாயுதம்பாளையம் கிராமத்தில் உள்ள நிழற்கூரையிலும் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துகின்றனர். அங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.