/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வெள்ளியங்கிரி மலையில் மாயமான இளைஞரை ரகசியமாக தேடும் வனத்துறை!
/
கோவை வெள்ளியங்கிரி மலையில் மாயமான இளைஞரை ரகசியமாக தேடும் வனத்துறை!
கோவை வெள்ளியங்கிரி மலையில் மாயமான இளைஞரை ரகசியமாக தேடும் வனத்துறை!
கோவை வெள்ளியங்கிரி மலையில் மாயமான இளைஞரை ரகசியமாக தேடும் வனத்துறை!
ADDED : ஆக 07, 2024 12:50 AM

கோவை:பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீறி ஏறி காணாமல் போன தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை, வனத்துறையினரும் போலீசாரும் ரகசியமாக தேடி வருகின்றனர்.
கோவை பூண்டியில் உள்ள, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மண்டப புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 7 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி, தடையை மீறி, வெள்ளியங்கிரி மலை ஏறினர். 3வது மலையிலேயே அதிக பனி மூட்டம் காணப்பட்டதால், மேற்கொண்டு மலை ஏறாமல் திரும்பியுள்ளனர். ஆனால், இவர்களில் முனுசாமி, 27 என்பவர் மட்டும் பிறரிடம் கூறாமல், மலைமேல் சென்றுள்ளார்.
பாதியில் திரும்பியவர்கள் இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர், ஆலாந்துறை போலீசாரின் உதவியுடன் இரு குழுக்களாக பிரிந்து, முனுசாமியை ரகசியமாக தேடி வருகின்றனர். கடந்த 1ம் தேதி முதல், நேற்று மாலை வரை தேடியும் முனுசாமியை கண்டுபிடிக்க முடியாமல், திணறி வருகின்றனர்.
மலை ஏற தடை விதிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இவர்களை மலையில் ஏற எப்படி அனுமதித்தனர்? தடை விதிப்பதாக அறிவித்தால் மட்டும் போதுமா? கண்காணிப்பில் ஈடுபட வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், 2014ல் திண்டுக்கல்லை சேர்ந்த திரைப்பட இயக்குனர் வினோ மிர்தாத் என்பவர், லொக்கேஷன் பார்க்க மலைமேல் சென்று காணாமல் போனார். 10 ஆண்டுகளாகியும் இவர் குறித்து இன்று வரை எந்த தகவலும் இல்லை.
தற்போது முனுசாமியை ரகசியமாக தேடும் வனத்துறை, அவர் கிடைக்கவில்லை என்றால், இச்சம்பவத்தை அப்படியே மூடி மறைத்து விடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.