ADDED : ஜூலை 19, 2026 08:22 PM
கோவை: ரத்தினபுரி நாராயணசாமி லேஅவுட் குடியிருப்பில், பிரிஜ் வெடித்து சிதறியது.
மதுரையை சேர்ந்த ஜெயபிரகாஷ், டீக்கடையில் பணிபுரிகிறார். குடும்பத்துடன் 20 ஆண்டுகளாக கோவையில் வசிக்கிறார். குடும்பத்தில் இருந்த அனைவரும் நேற்று வெளியில் சென்றிருந்தனர். திடீரென்று பிரிஜ் வெடித்து கரும்புகையுடன் தீ பரவியது. பாத்திரங்கள், ஆவணங்கள் எரிந்தன. கணபதி தீயணைப்பு குழுவினர் தீயை அணைக்க முயன்றனர்.
பிரிஜ் அருகே இருந்த 10 கிலோ மிளகாய் பொடி நெடி மூக்கில் ஏறியதில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும் தொடர்ந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கணபதி நிலைய அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ‘‘பிரிஜில் அளவுக்கு அதிகமாக பொருட்களை வைத்ததால் விபத்து நடந்துள்ளது. அருகிலேயே மூன்று சிலிண்டர்கள் இருந்தன. வெடித்து இருந்தால் விபத்து பெரிதாகி இருக்கும். வீட்டில் காற்றோட்டத்திற்கான வழிகளும் இல்லாததால் சிரமம் ஏற்பட்டது,’’ என்றார்.
