/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நம்மை அடையாளப்படுத்தும் 'நமக்குள் ஒருவன்'
/
நம்மை அடையாளப்படுத்தும் 'நமக்குள் ஒருவன்'
ADDED : ஆக 24, 2024 11:49 PM

அழகிய பூ. அதைப் பறிக்க எத்தனிக்கின்றன விரல்கள். ஆனால், பூவில் அமரும் பட்டாம்பூச்சி, பூ பறிப்பதை தடுத்து விடுகிறது.
பூ அழகு... பட்டாம்பூச்சி அழகு... இந்த இயற்கை அழகு... அதை கொண்டாடும் மனம் அழகு. ஆனால், மனதை கொண்டாட தவறி விட்டோம்.
பல்வேறு எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் என மனதுக்குள் தேவையில்லாத சுமை. இப்போது மனம் தான் பிரச்னை என்கிறார், தன்னம்பிக்கை பேச்சாளர் பல்லடத்தை சேர்ந்த சசிகுமார்.
வாழ்க்கையை எப்படி கொண்டாட வேண்டும் என்று, பயிற்சி அளித்து வருகிறார் இவர். 2019ல் இருந்து துவங்கிய, மனதை தெளிவுபடுத்துகிற தன் உணர்வு பயிற்சி, இதுவரை, நேரடியாக மற்றும் ஆன்லைன் வாயிலாக, 5 லட்சம் பேரிடம் சேர்ந்துள்ளது என, பெருமிதம் தெரிவிக்கிறார்.
எப்படி அது? அவரே சொல்கிறார்...!
தனி மனிதனுக்கு, பணம், உறவு, தொழில், ஆரோக்கியம், சமுதாயம் சார்ந்து என, ஐந்து வகையான பிரச்னைகள். சிறு வயதில் பெற்றோரால் ஊட்டப்படுகிற நடவடிக்கை, ஆழமாக பாதித்த சம்பவங்கள், தேவையில்லாத எண்ணங்கள் போன்றவை, ஐந்து வகையான பிரச்னைகளை உருவாக்குகிறது. இவை எல்லாம் பிரச்னை என்று, நினைப்பதுதான் பிரச்னை. அதை உருவாக்கும் மனம்தான் பிரச்னை.
மனதை எப்படி கொண்டாடுவது என்று, கடந்த 5 வருடங்களாக பயிற்சி அளித்து வருகிறேன். இதனால், 494 விவாகரத்துகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. விவாகரத்தான 9 குடும்பங்கள் மீண்டும் இணைந்திருக்கின்றன.
கடனில் இருந்த 25 பேர் மீண்டும், இன்று நல்ல நிலையில் உள்ளனர். அதிகாலையில், மனம் நல்ல நிலையில் இருக்கும். அதற்காகத்தான், அதிகாலையில் பயிற்சி அளிக்கிறேன்.
மனதை முழுவதுமாக அறிவதுதான் பயிற்சியின் நோக்கம். தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள் உணர்வுக்கு வழிகாட்டும். சிக்கல்களை எதிர்கொள்ள உதவும்.
- மயிலிறகு வருடுவது போல், அழகாக பேசிக்கொண்டே போகிறார் சசிக்குமார்.

