/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'புலிகளின் வளமே காட்டின் வளம்'
/
'புலிகளின் வளமே காட்டின் வளம்'
ADDED : ஆக 01, 2024 12:52 AM

ஆனைமலை : ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், புலிகள் தின கொண்டாட்டம் நடந்தது.
ஆனைமலை அருகே, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி தலைமை வகித்து, ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
பசுமை படையை சேர்ந்த மாணவ, மாணவியர் சீருடை அணிந்தும், புலி முகமூடியை அணிந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில், புலிகளை காப்போம், புலிகளின் வளமே காட்டு வளம் என, கோஷமிட்டவாறு கைகளில் பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
மேலும், அனைத்து மாணவர்களும் ஒருங்கிணைந்து, 'டைகர்' என்ற வடிவத்தில் அமர்ந்து புலிகள் தினத்தை கொண்டாடினர். பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
* ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், உலக புலிகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமையாசிரியர் கிட்டுச்சாமி தலைமை வகித்தார்.
கருத்தரங்கில், ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, லோகநாயகி, சுதா ஆகியோர் பேசுகையில், 'புலிகள் இருக்கும் வனம், அனைத்து உயிரினங்களும் வாழும் அடர்த்தியான வனமாகும்.
புலியின் நீளம் தோராயமாக, 13 அடி, எடை, 300 கிலோவாகும். அறுபது முதல் நுாறு கிலோ மீட்டர் வனத்தில் புலி வசிக்கிறது. மணிக்கு, 40 முதல், 65 கி.மீ., வேகத்தில் புலியானது பாய்ந்து செல்லும்,' என்றனர்.
தொடர்ந்து, விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.