/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசாரிடம் தப்பிக்க குளத்தில் குதித்த இளைஞர் பலி
/
போலீசாரிடம் தப்பிக்க குளத்தில் குதித்த இளைஞர் பலி
ADDED : ஆக 18, 2024 01:35 AM
கோவை;போலீசாரிடம் இருந்து தப்ப, குளத்தில் குதித்த இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை ராமநாதபுரம் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவை சுங்கம் பைபாஸ் ஆல்வின் நகர் பகுதியில், மூவர் போலீசாரை கண்டதும் ஓடத் துவங்கினர்.
போலீசார் அவர்களை துரத்தியதில், இருவர் சிக்கினர். மற்றொருவர் தப்பினார். விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீஹரி, 18, ஒண்டிபுதுாரை சேர்ந்த, தரணீஸ்வரன், 18, தப்பியோடியவர் ஒண்டிபுதுாரை சேர்ந்த விஸ்வா, 18 என்பது தெரிந்தது.
மூவரும் தனியார் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த பசுபதி, 19 என்பவரிடம் மொபைல்போன் திருடி தப்பியபோது, போலீசாரை கண்டு பயந்து ஓடியுள்ளனர்.
இந்நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பியோடிய விஸ்வா, சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள வாலாங்குளத்தில் குதித்து, நீந்தி தப்பிக்க முயன்றார்.
குளத்தில் தொடர்ந்து நீந்த முடியாததால், அங்கு பணியில் இருந்த மாநகராட்சி செக்யூரிட்டி ரூபனிடம், தன்னை காப்பாற்றுமாறு கூறினார். ரூபன் அவரை காப்பாற்ற முயன்றார்.
முடியாததால், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விஸ்வாவை மீட்டனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்து விட்டார். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.