/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடம் மேம்பால பணி; ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
உக்கடம் மேம்பால பணி; ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : மே 24, 2024 01:34 AM

கோவை;உக்கடம் பஸ் டிப்போ எதிரே ரோட்டோரம் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகள், வீடுகளை மேம்பால பணிகளுக்காக மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று இடித்து அகற்றினர்.
உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணி அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டது. முதலில் உக்கடம் முதல் கரும்புக்கடை வரை மட்டுமே மேம்பாலம் கட்ட திட்டமிட்ட நிலையில், ஆத்துப்பாலத்தை கடக்கும் வகையில் நீட்டிக்க வேண்டும் என்ற பொது மக்கள் கோரிக்கையை அடுத்து நீட்டிக்கப்பட்டது.
தற்போது, ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோர் வாலாங்குளம் ரோட்டுக்கு செல்லும் இறங்கு தளம், உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் கடந்து பொள்ளாச்சி ரோடு மற்றும் பாலக்காடு ரோட்டுக்கு செல்ல வேண்டிய இறங்கு தளங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்காக ரோட்டில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
உக்கடம் பஸ் டிப்போ எதிரே ரோட்டோர ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றுமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
ஆக்கிரமிப்பாளர்களில் பலர் தாங்களாகவே கடைகளை அகற்றிவிட்டனர். நேற்று முன்தினத்துடன் அவகாசம் முடிந்ததை அடுத்து கடைகள், வீடுகளை இடிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, கடைகளை, வீடுகளை இழந்த பெண்கள் சிலர் கண்ணீர் விட்டு புலம்பினர்.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில்,'உக்கடம் ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்திருந்த, 36 கடைகள், 14 வீடுகள் என, 50 கட்டடங்களை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கியிருந்தோம். ஏழு நாள் அவகாசம் முடிவடைந்ததை அடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவருகிறோம்' என்றனர்.