/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எலவக்கரை குளத்துக்கு ஆழியாறில் நீர் திறப்பு
/
எலவக்கரை குளத்துக்கு ஆழியாறில் நீர் திறப்பு
ADDED : ஜூலை 03, 2024 09:23 PM

பொள்ளாச்சி: ஆழியாறு அணையில் இருந்து, சமத்துார் அருகேயுள்ள எலவக்கரை குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே, சமத்துார் எலவக்கரை குளம் மொத்தம், 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்துக்கு ஆழியாறு அணையிலிருந்து, தண்ணீர் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, 250.54 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்த குளத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அரசு உத்தரவின் பேரில், ஆழியாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர்வளத்துறையினர் கூறியதாவது:
ஆழியாறு அணையில் இருந்து, எலவக்கரை குளத்தை நிரப்புவதால் அதன் ஆயக்கட்டுப்பகுதியில் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றுவதற்காகவும், பாலாற்றில் தண்ணீர் கொண்டு செல்வதால், ஜல்லிபட்டி, துறையூர், கம்பாலபட்டி மற்றும் கரியாஞ்செட்டிபாளையம் கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.
குடிநீர் தேவைகளும் மறைமுகமாக பூர்த்தி செய்யப்படும் என்பதால், தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆழியாறு அணையில் இருந்து, நேற்று முதல் வரும், 9ம் தேதி வரை, மொத்தம், 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. விநாடிக்கு, 61 கனஅடி வீதம், 32 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.