ADDED : ஜூலை 13, 2026 08:21 PM
கூடுதல் இழப்பீடு கொடுத்தாலும் நிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு
சூலூர்: –: -: விளைநிலங்களில் குழாய் பதித்து, பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் திட்டத்தை ஏற்க போவதில்லை, என, விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், இருகூரில் இருந்து பெங்களுரூ மாநிலம் தேவனஹள்ளி வரை குழாய் வழியாக பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் திட்டத்தை, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்காக, ஐ.டி.பி.எல்., நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. குழாய் பதிக்கும் பணிகள், இருகூர், சூலூர் பகுதிகளில் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.டி.பி.எல்., மாற்று வழி குழு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனால், பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் குழாய் பதிக்கும் பணியையும் விவசாயிகள் தடுத்தனர். அதன்பின், திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த கோரி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி பாளையத்தில் விவசாயிகள் நடத்திய காத்திருப்பு போராட்டம், ஒராண்டுக்கும் மேல் நீடித்தது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் பணிகள் நடக்க வில்லை. மற்ற மாவட்டங்களில் சாலை ஓரமாக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த, 2023 ல் துவங்கிய பணியில், 276 கி.மீ., தூரம் குழாய் பாதிக்கப்பட்டு, 70 சதவீத பணி முடிந்துள்ளது. வரும், செப்., மாதத்துக்குள் பணிகளை முடிக்க ஐ.டி.பி.எல்., நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வெளியிடப் பட்டுள்ள அரசாணையில், மொத்தமுள்ள, 339 கி.மீ., தூரத்தில், 140 கி.மீ., தூரத்துக்கு பணிகள் நடக்க வேண்டி உள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக பணிகளை தொடர் முடியவில்லை. அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், புதிய குழாய் பதிப்பதற்கான நில இழப்பீடு, சந்தை மதிப்பில், 100 சதவீதமாகவும், கூடுதல் குழாய் பதிப்பதற்கான இழப்பீடு, சந்தை மதிப்பில், 20 சதவீதமாகவும் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை விரைந்து முடிக்க, கூடுதல் குழாய் பதிப்பதற்கு, தற்போதுள்ள, 20 சதவீத இழப்பீடு என்பதை, 100 சதவீத சந்தை மதிப்பாக உயர்த்தி வழங்க, பி.பி.சி.எல்., நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஐ.டி.பி.எல்., திட்ட மாற்றுவழி ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ரவிக்குமார் ஆகியோர் கூறியதாவது:
விளை நிலங்கள் வழியே பெட்ரோல் குழாய் பதிக்க கூடாது. மற்ற பகுதிகளில் செயல்படுத்தியது போல், இப்பகுதியிலும், சாலை ஓரம் குழாய் பதிக்க வேண்டும், என, மூன்று ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இப்போது, மாற்று வழியில் சாத்தியமில்லை, பாதுகாப்பு இல்லை என்கின்றனர். அப்போது, எங்கள் விளை நிலங்கள் வழியாக குழாய் பதித்து, பெட்ரோலிய பொருட்கள் கொண்டு சென்றால், எங்கள் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் தருவது. இழப்பீட்டை உயர்த்தி வழங்குவதாக கூறியுள்ளனர். அதை நாங்கள் ஏற்கமாட்டோம். எங்கள் நிலம், எங்கள் உரிமை. அதை விட்டுக்கொடுக்க மாட்டோம். திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. விளை நிலத்தை விடுத்து மாற்று வழியில் செயல்படுத்துங்கள் என்பதே எங்கள் கோரிக்கையாகும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
