ADDED : மே 21, 2026 03:50 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பிளாட்பாரம் நீட்டிப்பு பணிகள் செய்யாததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில் நாளுக்குநாள் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாராந்திர ரயிலுக்கு குறைந்தது, 400க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர்.
ரயில்வே பாதையில் வரும் சில ரயில்கள், பிளாட்பாரம் நீளத்தை விட நீளமாக இருப்பதால், பிளாட்பாரத்தை தாண்டி ரயில் நிற்கிறது. இதனால் பயணியர் பலர் தண்டவாளத்தில் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, இரவு நேரத்தில் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், இந்த பிளாட்பாரத்தை ரயிலின் நீளத்திற்கு ஏற்ப நீட்டிக்க கோரி வலியுறுத்தப்பட்டு வந்தது.
இது சம்பந்தமாக, கருத்துரு தயார் செய்து ரயில்வே நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இப்பணிகள் இன்னும் துவங்காததால், ரயில் பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, பிளாட்பாரம் நீளத்தை நீட்டிப்பு பணிகளை ரயில்வே நிர்வாகம் சார்பில் விரைவில் துவங்க வேண்டும், என, மக்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.
