/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்காவுக்குள் 23 தோட்டங்கள் உருவாக்குவது எப்போது? கமிஷனர் பதில்
/
செம்மொழி பூங்காவுக்குள் 23 தோட்டங்கள் உருவாக்குவது எப்போது? கமிஷனர் பதில்
செம்மொழி பூங்காவுக்குள் 23 தோட்டங்கள் உருவாக்குவது எப்போது? கமிஷனர் பதில்
செம்மொழி பூங்காவுக்குள் 23 தோட்டங்கள் உருவாக்குவது எப்போது? கமிஷனர் பதில்
ADDED : ஆக 27, 2024 10:24 PM
கோவை;''கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில், கான்கிரீட் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு, 23 வகையான தோட்டங்கள் உருவாக்கப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.
காந்திபுரத்தில் மத்திய சிறைக்கு சொந்தமான, 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.172 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படுகிறது. இப்பணியை மாநகராட்சி மேற்கொள்கிறது.
கடந்த, 2023 டிச., 18ல் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், ''தாவரவியல் தோட்டத்தை பின்புலமாக வைத்து செம்மொழி பூங்கா அமைக்கப்படும். பொதுமக்கள் இயற்கையை தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் ஏற்ற வகையில், தாவர இனங்கள் நிலைக்கத் தக்க வகையில் அமைக்கப்படும். செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், மூங்கில் வனம், நட்சத்திர வனம், நறுமண வனம் உள்ளிட்ட, 23 தோட்டங்கள் அமைக்கப்படும்,'' என கூறினார்.
பணிகள் துவங்கி, எட்டு மாதங்களாகி விட்டன. ஆனால், செம்மொழி பூங்கா வளாகத்துக்குள் கான்கிரீட் கட்டடங்கள் மட்டுமே கட்டப்படுகின்றன. பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், பூங்கா பராமரிப்பாளர்கள் அறை, நுழைவாயில், டிக்கெட் கவுன்டர் சுகாதார வளாகம், சுற்றுச்சுவர் கட்டும் பணிகளே நடந்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்த, 23 தோட்டங்கள் உருவாக்கும் பணி இன்னும் துவங்கவில்லை.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''செம்மொழி பூங்கா வளாகத்தில் மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இவற்றுக்காக வாகனங்கள் 'மூவ்மென்ட்' இருக்கின்றன. வாகனங்கள் இயக்கத்தை குறைத்தால் மட்டுமே பூங்காக்கள் உருவாக்க முடியும். தற்போதைய பணிகள் முடிந்தால் மட்டுமே பூங்காக்களுக்கான முழு வடிவமைப்பு தெரியவரும். 2025 மே மாதம் வரை அவகாசம் இருக்கிறது. அதற்குள் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிப்போம். அனைத்து தோட்டங்களும் கண்டிப்பாக வரும்,'' என்றார்.