/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுழற்றடிக்குது காற்று விவசாயிகளே...பார்த்து!
/
சுழற்றடிக்குது காற்று விவசாயிகளே...பார்த்து!
ADDED : ஜூலை 26, 2024 11:23 PM
கோவை;கோவை உள்ளூர் பகுதிகளில் அதிவேக காற்று மற்றும் லேசான மழை எதிர்பார்க்கப்படுவதால் , கரும்பு மற்றும் வாழையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வரும் நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக, 27 முதல் 30டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 21-23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலையில், காற்றின் ஈரப்பதம், 80 சதவீதமாகவும், மாலையில் 50 சதவீதமாகவும் இருக்கும்.
நடவு செய்த 30 நாட்களான, இறவை மக்காச்சோள பயிர், ஒரு ஏக்கருக்கு 125 கிலோ யூரியா மற்றும் 25 கிலோ பொட்டாஷை, களை எடுத்தபின் மேலுரமாக இடவேண்டும்.
அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த, புளூபென்டஅமைடு 480 எஸ்.சி., 10 லிட்டருக்கு 4 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
அடிசாம்பல் நோயை மேலாண்மை செய்ய மெட்டாலாக்ஸில் மற்றும் மேன்கோசெப் கலவையை லிட்டருக்கு, 2 கிராம் என்ற அளவில் தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.