/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? மூன்று ஊராட்சி மக்கள் எதிர்பார்ப்பு
/
துணை சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? மூன்று ஊராட்சி மக்கள் எதிர்பார்ப்பு
துணை சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? மூன்று ஊராட்சி மக்கள் எதிர்பார்ப்பு
துணை சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? மூன்று ஊராட்சி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 16, 2024 06:28 AM
பொள்ளாச்சி : ஆனைமலை தாலுகா, தளவாய்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 322 துணை சுகாதார நிலையங்களும், 53 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. தளவாய்பாளையம், வீரல்பட்டி, தொண்டாமுத்தூர், பழையூர் ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள், கஞ்சம்பட்டி மற்றும் சமத்தூரில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், சில கிராமங்களுக்கு போதிய பொதுப்போக்குவரத்து வசதி இல்லை. அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, கரட்டுப்பாளையத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வீரல்பட்டி, புளியம்பட்டி, பொன்னாண்டக்கவுண்டனூர், தொண்டாமுத்தூர், கரட்டுப்பாளையம், தளவாய்பாளையம், நாச்சிபாளையம் கிராமங்களில், 8,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் இருந்து, மருத்துவத் தேவைகளுக்காக கஞ்சம்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது சமத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
செல்லப்பம்பாளையத்தில் ஆரம்பசுகாதார நிலையம் உள்ளது. ஆனால், அது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. தேனீ கடித்த விவசாயிகள் அங்கு சிகிச்சைக்காக சென்றபோது, கஞ்சம்பட்டி சென்றிருக்கலாமே எனக் கேட்டு அலைக்கழித்த சம்பவங்களும் நடந்துள்ளன.
எனவே, கரட்டுப்பாளையம் பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைத்தால், இப்பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும்.
இதை ஒரு தனிப்பட்ட கிராமத்துக்கான திட்டமாக கணக்கில் கொள்ளாமல், மூன்று ஊராட்சிகளுக்கான திட்டமாகக் கருதி, துணை சுகாதார நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
தொண்டாமுத்தூர் அல்லது கரட்டுப்பாளையத்தில் அமைக்கலாம். தொண்டாமுத்தூரை விட, கரட்டுப்பாளையம் கிராமத்தை மற்ற இரு ஊராட்சி மக்கள் எளிதில் அணுக முடியும். எனவே, இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
செவிலியர் ஒருவர் இங்கேயே தங்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியுடன் அமைக்கப்பட்டால், விவசாயிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.