/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாவரவியல் பூங்கா புதுப்பொலிவு பெறுமா? சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
/
தாவரவியல் பூங்கா புதுப்பொலிவு பெறுமா? சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
தாவரவியல் பூங்கா புதுப்பொலிவு பெறுமா? சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
தாவரவியல் பூங்கா புதுப்பொலிவு பெறுமா? சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : செப் 11, 2024 10:20 PM

வால்பாறை : வால்பாறை நகராட்சியில் பல கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் அடிப்படை வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வால்பாறை நகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில், நகராட்சி சார்பில், அ.தி.மு.க., ஆட்சியில், 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த, 2022ம் ஆண்டு பூங்கா மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஆனால், பூங்காவில் சுற்றுலா பயணியருக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால், புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பகல் நேரத்திலேயே பாம்புகள் ஊர்ந்து செல்வதை காண முடிகிறது. மாலை நேரத்தில் புதரில் சிறுத்தை பதுங்கி, மக்களை அச்சுறுத்துகிறது.
அவசர கோலத்தில் பூங்கா திறக்கப்பட்டதால், பூச்செடிகள் கூட மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
பொலிவிழந்து காணப்படும் பூங்காவால் வால்பாறை மக்களும், சுற்றுலா பயணியரும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
வால்பாறை நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்க நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு, 20 ரூபாயும், சிறுவர்களுக்கு, 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் தோழிகளை அழைத்துக்கொண்டு பூங்காவிற்கு நுழைவு கட்டணம் செலுத்தி, மாலை வரை பூங்காவிலேயே பொழுதை கழிக்கின்றனர். சுற்றுலா வரும் காதல் ஜோடிகளும் பூங்காவை ஆக்கிரமித்து விடுகின்றனர். இதையெல்லாம் தடுத்து, பாதுகாப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.
பணிகள் துவங்கும்!
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வால்பாறையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பூங்காவை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழைக்கு பின், சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள் மாற்றியமைக்கப்படும். பூங்காவை சுற்றியுள்ள புதர் உடனடியாக அகற்றப்படும்.
கேண்டீன் திறக்கவும், பூங்காவில் மலர் செடிகள் அதிக அளவில் வளர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
மக்களை அச்சமூட்டுகிறது!
விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவில் பூங்காவை கண்டு ரசிக்க வருகின்றனர். ஆனால், எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், பூங்காவை கண்டு ரசிக்க வரும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. பூங்காவை சுற்றிலும் புதர்மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் குழந்தைகள் பூங்காவிற்குள் செல்ல அச்சப்படுகின்றனர். கழிப்பிடம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில், சுகாதாரமின்றி உள்ளது. பூங்காவை காண வரும் மக்களுக்காக கட்டப்பட்ட கேண்டீன் திறக்கப்படவில்லை. பூங்காவுக்கு வரும் குழந்தைகள் முதல் முதியவர் வரை அவதிப்படுகின்றனர்.
- பாலமுருகன், வால்பாறை.