/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் கம்பி மாற்றப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
மின் கம்பி மாற்றப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 20, 2024 11:12 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோதவாடியில், டிரான்ஸ்பார்மர் மின் கம்பி பழுதடைந்துள்ளதால், மின் கம்பிகளை மாற்றியமைக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் கிழக்கு பகுதியில் குளம் உள்ளது. குளம் அருகே டிரான்ஸ்பார்மர் மின் கம்பிகள் பழுதடைந்து இருந்தது. மேலும், சில சமயங்களில் இந்த மின் கம்பிகள் அறுந்து கீழே விழுகிறது.
இதை தொடர்ந்து, தற்காலிகமாக மின் கம்பி சரி செய்யப்பட்டு வந்தது. ஆனால் மழை, காற்றுக்கு இந்த மின்கம்பிகள் மீது தென்னை ஓலை, மட்டை விழும் போது, அடிக்கடி அறுந்து விழுகிறது.
குளத்தின் அருகே, பொதுமக்கள், விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வாடிக்கையாக உள்ளது. இப்பகுதியில் விளை நிலமும் இருப்பதால், விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். மின் கம்பி அறுந்து விழும் போது, தவறுதலாக யாராவது மிதிக்க நேர்ந்தால், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படும்.
இந்த மின்கம்பிகளை புதுப்பிக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், குளத்து பரப்பில் அச்சத்துடன் மக்கள் நடந்து செல்கின்றனர்.
இந்த மின் கம்பிகளால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என, கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி மற்றும் விவசாயிகள் சார்பில், மிகவும் பழைய, பழுதடைந்த இந்த மின் கம்பிகளை மாற்றி தர கோரி, தாமரைக்குளம் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

