ADDED : மார் 20, 2026 09:54 PM

மேட்டுப்பாளையம்: வரும் சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என, மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில், நந்தவனத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம் பிள்ளை மயானம் அருகே, அனைத்து இந்து சமுதாய நந்தவனம் உள்ளது. இங்கு இறந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் ஆகிய கர்ம காரியங்கள் செய்ய, தினமும் பலர் வருகின்றனர். இங்கு, மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்து பேசுகையில், ''வரும் சட்டசபை தேர்தலில், அனைத்து வாக்காளர்களும், 100 சதவீதம் வாக்களிக்க முன்வர வேண்டும். ஓட்டு நமது அடிப்படை உரிமை. அதை நாம் இழக்கக் கூடாது. எனவே, அனைவரும் ஓட்டுப் போட வேண்டும்,'' என்றார்.
நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், நந்தவன பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பங்கேற்றவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதில், 'சுதந்திரமாக வாக்களிப்போம், சுதந்திரத்தை பேணி காப்போம். வாக்குரிமை நமது அடிப்படை உரிமை' என, அச்சிடப்பட்டிருந்தன.
