/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி மையங்களில் புதியதாக 101 குழந்தைகள்
/
அங்கன்வாடி மையங்களில் புதியதாக 101 குழந்தைகள்
ADDED : ஜூன் 29, 2025 11:25 PM
வால்பாறை; வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையங்களில், இதுவரை, 101 குழந்தைகள் புதியதாக சேர்ந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறையில், 43 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த அங்கன்வாடி மையங்களில், தற்போது, 855 குழந்தைகள் உள்ளனர். இந்த கல்வியாண்டில் இதுவரை, 101 குழந்தைகள் புதியதாக சேர்ந்துள்ளனர்.
வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் தான் அதிகளவில் சேர்ந்துள்ளனர். அங்கன்வாடி மையங்களில் கூடுதலாக குழந்தைகளை சேர்க்க பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
குழந்தைகள் மூளைத்திறன் வளர்ச்சியடைய அங்கன்வாடி மையங்களில், 2 வயது முதல் 4 வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு, அங்கன்வாடி மையங்களில் ஆரம்ப கல்வி கற்றுத்தரப்படுகிறது.
குழந்தைகளின் அறிவாற்றலை துாண்டும் வகையில், கதை, பாட்டு, விளையாட்டு வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் கல்வி கற்க தேவையான உபகரணங்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான சத்தான உணவு வழங்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.
காலி பணியிடங்கள்!
வால்பாறை அங்கன்வாடி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாகவே உள்ளது. இதனால், மையங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தவிர, இரண்டு பணியாளர்கள் பணியிடமும், 9 உதவியாளர் பணியிடமும் காலியாகவே உள்ளன. இதனால், சில மையங்களில் பணியாளர்களே, சமையலும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.