/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை
/
அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை
ADDED : மே 02, 2025 08:45 PM
பொள்ளாச்சி; அங்கன்வாடி மையங்களுக்கு, வரும், 11 முதல் 25ம் தேதி வரை, 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளை பள்ளிக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார் படுத்துவதற்காக, முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, இரண்டு முதல், ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களில் 1,775 குழந்தைகள், தெற்கு ஒன்றியத்தில் உள்ள 99 அங்கன்வாடி மைங்களில், 1,750 குழந்தைகளும் முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு, வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வு மற்றும் காணும் காட்சிகளையும் விரிவாக அறிய, செயல்முறை கருவிகளுடன் கல்வி கற்பிக்கப்படுகிறது.
பள்ளிப் பருவத்துக்கு முன்பே, கல்வியில் நல்ல வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக பெற்றோரும் ஆர்வமுடன் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அழைத்து வருகின்றனர்.
தற்போது, வெயிலின் தாக்கம் காரணமாக, அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் வருகை மிக குறைவாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளைப் போலவே, அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 11 முதல் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
இது குறித்து, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:
இம்மாதம், 11 முதல் 25ம் தேதி வரை, 15 நாட்களுக்கு அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அரசு அறிவிப்பு வெளியிட்டதும், அதற்கேற்ப முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் சத்துமாவை கணக்கிட்டு, 15 நாட்களுக்கு சேர்த்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.