/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே மாதத்தில் 20 தீ விபத்துக்கள்
/
ஒரே மாதத்தில் 20 தீ விபத்துக்கள்
ADDED : மார் 19, 2024 11:16 PM

சூலுார்:கடுமையான வறட்சி காரணமாக ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதால், எச்சரிக்கையாக இருக்க தீயணைப்பு துறையினர் அறிவுறுத்திஉள்ளனர்.
சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. மேலும், ஏராளமான ஸ்பின்னிங் மில்கள், விசைத்தறி குடோன்கள், கோழிப்பண்ணைகள், தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 20 க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ந்த புற்களில் தீப்பற்றி விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு செல்லும் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.
தீ விபத்துக்கு காரணம்
தீ விபத்துகள் எதுவும் தானாக நடப்பதில்லை. மனித தவறுகள் காரணமாகத்தான் பெரும்பாலான தீ விபத்துகள் ஏற்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதிய விழிப்புணர்வு இல்லாமல் செயல்படும் சில மனிதர்களால் சிறிய தீயானது பரவி பெரிய தீ விபத்துக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
இதுகுறித்து சூலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் ரகுநாதன் கூறியதாவது:
பொது இடங்கள் மற்றும் காடுகளில் குப்பைக்கு தீ வைத்து எரிக்க கூடாது. ரோட்டில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரில் ஒரு சிலர் பீடி மற்றும் சிகரெட்டை புகைத்து விட்டு, அணைக்காமல் அப்படியே வீசி செல்வதால், பெரும்பாலான தீ விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
இயந்திரங்கள், மற்றும் மின் சாதன பொருட்களில் மின் இணைப்புகள் முறையாக உள்ளதா என, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அவசர உதவிக்கு
கோடை காலம் என்பதால், பொதுமக்கள் மற்றும் தொழிற்துறையினர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை வட்டார பகுதிகளில் தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளுக்கு 0422 - 2689101என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

