/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலாவதியான 278 கிலோ பேரிச்சம்பழம் பறிமுதல்
/
காலாவதியான 278 கிலோ பேரிச்சம்பழம் பறிமுதல்
ADDED : ஜூலை 23, 2025 10:55 PM

கோவை; கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், 'இ-காமர்ஸ் குடோன்களில், கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிளிப்கார்ட் குடோனில் இருந்து, காலாவதியான 278 கிலோ பேரிச்சம்பழம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், நாடு முழுவதும் இ-காமர்ஸ் நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவையில், 37 இ- காமர்ஸ் நிறுவனங்களின் குடோன்கள், பல்வேறு இடங்களில் செயல்படுகின்றன.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர், கடந்த சில நாட்களாக இக்குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம், பூச்சி மேலாண்மை கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு , சுத்தம், சுகாதாரம், உணவு வைக்கப்படும் வெப்பநிலை, பணியாளர்களுக்கான மருத்துவ சான்றிதழ், கழிவு மேலாண்மை என அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''இ-காமர்ஸ் நிறுவனங்கள், குடோன்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
உரிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 37 நிறுவனங்களில் அனைவரும் உரிமம் வைத்திருந்தனர்.
ஒரு சில இடங்களில், விதிமீறல் கண்டறியப்பட்ட 6 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம்.
இதில், ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள, பிளிப்கார்ட் குடோனில் காலாவதியான 278 கிலோ பேரிச்சம்பழம் பறிமுதல் செய்து, அங்கேயே அழிக்கப்பட்டது,'' என்றார்.

