ADDED : மார் 16, 2026 05:12 AM
கோவை: தமிழகம் முழுவதும் தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) ஜன.,10ம் தேதி நடந்தது. மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், மாவட்டத்தில் இருந்து 229 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அறிவுறுத்தலில், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், என்.எம்.எம்.எஸ்., தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது. தமிழகம் முழுவதும் 6,695 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 5,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 285 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம் ரூ.ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
