/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் இருந்து 'பறந்த' 3 டன் இனிப்பு
/
கோவையில் இருந்து 'பறந்த' 3 டன் இனிப்பு
ADDED : நவ 01, 2024 12:20 AM
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விமானத்தின் மூலம் கோவையில் இருந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 3 டன்னுக்கும் அதிகமான இனிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் 30 விமான சேவைகள் கோவையில் இருந்து வழங்கப்படுகின்றன.
மாதம், சராசரியாக 2.8 லட்சம் பயணிகள் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். சரக்குப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து அதிகமாக கையாளப்படுகிறது.
மாதம்தோறும் சரக்கு கையாள்வது அதிகரித்து வருகிறது. கடந்த ஜூனில் 936 டன் சரக்கும், ஜூலையில், 1,079 டன்னும், ஆக.,ல் 1,239 டன் சரக்கும் கையாளப்பட்டது. சராசரியாக மாதத்துக்கு 100 டன் சரக்கு அதிகமாக கையாளப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, டில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கோவையில் இருந்து, விமானம் வாயிலாக 3 டன் இனிப்புகள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.
கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “கடந்த ஒரு வாரத்தில் 3 டன்னுக்கும் அதிகமான இனிப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. வெளிநாடுகளுக்கு அதிகம் அனுப்பப்படவில்லை. வழக்கமாக உணவுப்பொருட்கள்தான் அதிகம் ஏற்றுமதியாகின்றன. பண்டிகை என்பதால் இனிப்புகள், அதுவும் உள்நாட்டு பிரிவில் அனுப்பி வைக்கப்பட்டன” என்றனர்.

