ADDED : ஆக 03, 2025 09:45 PM
கோவை; சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 32 மி.மீ., மழை பதிவாகியுள்ளது; நீர் மட்டம், 40.97 அடியாக உயர்ந்தது.
கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியிருக்கிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 32 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது. அடிவாரத்தில், 5 மி.மீ., மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக, அணையின் நீர்மட்டம், 40.97 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காக, 99 எம்.எல்.டி., தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் வரும் 9ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 7ம் தேதி வரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8, 9ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் நாளை (5ம் தேதி) கன மழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். எனவே, மாவட்ட நிர்வாகம் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, பேரிடர் மேலாண்மை கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.