ADDED : ஏப் 17, 2026 08:16 PM
கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோரில், 4,746 அலுவலர்களே தபால் ஓட்டு பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர், தபால் ஓட்டு போடுவதற்கு, 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தபோது, சிறப்பு மையம் அமைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் பணி அலுவலர்களில், 12,019 பேர், இதர அலுவலர்கள் 1,022 பேர், மற்ற மாவட்டங்களில் வாக்காளர்களாக உள்ள தேர்தல் பணி அலுவலர்கள் 224 பேர் தபால் ஓட்டு பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து, படிவம் 12 பூர்த்தி செய்து கொடுத்திருந்தனர்.
இவர்களுக்காக, சட்டசபை தொகுதி வாரியாக சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இதில், 4,746 அலுவலர்களே தபால் ஓட்டு பதிவு செய்திருந்தனர். வரும் 19ம் தேதி மீண்டும் பயிற்சி வகுப்பு நடத்தும்போது, தபால் ஓட்டுப்போடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அப்போதும் ஓட்டை செலுத்தவில்லை எனில், மீண்டும் வாய்ப்பு தரப்பட மாட்டாது.
படிவம் 12 வழங்கி இருப்பதால், அவர்கள் ஓட்டுச்சாவடியிலும் ஓட்டுப்போட வாய்ப்பு கிடைக்காது. இம்முறை அஞ்சல் துறை மூலமாக தபாலில் அனுப்பும் நடைமுறையும் இல்லை என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் சட்டசபை தொகுதி வாரியாக பதிவான தபால் ஓட்டுகள் விபரம்: மேட்டுப்பாளையம் - 449, சூலுார் - 648, கவுண்டம்பாளையம் - 382, கோவை வடக்கு - 409, தொண்டாமுத்துார் - 620, கோவை தெற்கு - 494, சிங்காநல்லுார் - 530, கிணத்துக்கடவு - 528,பொள்ளாச்சி - 415, வால்பாறை - 271
