ADDED : ஜன 23, 2026 05:01 AM
கோவை, ஜன.23-
கோவை மண்டலத்தில் ஓராண்டில், குறிப்பிட்ட ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்கள், 78 கண்டம் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்து துறையின் கீழ், ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரத்துறை அலுவலக வளாகத்தில், கோவை மண்டல பணிமனை அலுவலகம் செயல்படுகிறது.
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுகாதாரத்துறையின் கீழ் இயக்கப்படும் அனைத்து வாகனங்களில் பராமரிப்பு, கண்காணிப்பு, கண்டம் செய்தல் போன்ற செயல்பாடுகள் இந்த அலுவலகத்தினரால் கண்காணிக்கப்படுகிறது.
சுகாதாரத்துறையின் கீழ் கண்டம் செய்யப்படவேண் டிய வாகனங்கள் நீண்டகாலமாக பயன்பாட்டில் உள்ளதாக ஓட்டுநர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதுகுறித்து, கோவை மண்டல பணிமனை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் கூறுகையில், ''சுகாதாரத்துறையை பொறுத்தவரையில் ஒவ்வொரு பிரிவுக்கு தகுந்தபடி பயன்பாட்டு நிலை கணிக்கப்படுகிறது.
குடும்பநலத்துறையில் வாகனங்களை 10 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ., வரையும், டி.பி.எச்., பிரிவுகளில் 15 ஆண்டுகள் அல்லது 2.5 லட்சம் வரையும் வாகனங்களை பயன்படுத்த முடியும். பயன்படுத்தமுடியாத வாகனங்கள் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து கண்டம் செய்து வருகிறோம். கோவை மண்டல பணிமனை அலுவலக கட்டுப்பாட்டில் 320 சுகாதாரத்துறை வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
''கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் அடங்கிய மண்டல அலுவலக கட்டுப்பாட்டில் 78 வாகனங்கள் இதுவரை கண்டம் செய்யப்பட்டுள்ளன; 28 வாகனங்கள் கண்டம் செய்வதற்காக ஏலத்தில் விடப்பட்டுள்ளன, '' என்றார்.

