/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிராணிகளுக்கும் கவுரவமான பிரியா விடை!
/
பிராணிகளுக்கும் கவுரவமான பிரியா விடை!
ADDED : ஜன 06, 2024 01:14 AM
நம் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் இறந்து விட்டால், அதன் துயரை அத்தனை எளிதில் விவரிக்க இயலாது. அதையும் விட வருத்தம் தருவது, அவற்றை எங்கே சென்று புதைப்பது என்பது தான். எந்தப் பொது இடத்திலும், சமாதிகளிலும் அதைப் புதைக்க அனுமதிப்பதில்லை. சொந்த வீடு, தோட்டம் இருப்போர், இருக்கும் இடத்தில் புதைத்து விடுகின்றனர். மற்றவர்களுக்கு இது பெரும் வேதனை தரும் சோதனை.
இந்தக் கவலைக்கு நிரந்தரத் தீர்வு கண்டிருக்கிறது, கோவை மாநகராட்சி. கோவை நகரில், சீரநாயக்கன் பாளையம் பகுதியிலுள்ள மாநகராட்சி நாய்கள் கருத்தடை மையத்தின் ஒரு பகுதியில், பிராணிகளுக்கான மின் மயானம் அமைக்க இடம் கொடுத்துள்ளது. அங்கு, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் ஸ்மார்ட் சிட்டி மற்றும் எஸ்.பி.சி.ஏ., இணைந்து, சிறு பிராணிகளுக்கான மின் மயானம் அமைத்துள்ளன.
தமிழகத்திலேயே செல்லப்பிராணிகளுக்கென்று மின் மயானம், முதலில் அமைக்கப்பட்டது, கோவையில்தான். இதை நிறுவியவர் அபர்ணா சுங்கு. ரோட்டரி கிளப் மற்றும் எஸ்.பி.சி.ஏ., இரண்டிலும் இடையறாது இயங்கும் சமூக ஆர்வலர்; செல்லப்பிராணிகள் விரும்பி. காஸ் உதவியுடன் இயங்கும் இந்த மின் மயானத்தில், செல்லப் பிராணிகளுக்கு எரியூட்ட ரூ.2500 கட்டணம் பெறப்படுகிறது.
அதேநேரத்தில், தெருநாய்கள் இறந்து, பதிவு பெற்ற தன்னார்வ அமைப்புகளால் கொண்டு வந்தால் இலவசமாக எரியூட்டப்படுகிறது. அதிகபட்சம் அரை மணி நேரத்திலிருந்து முக்கால் மணி நேரத்துக்குள், சாம்பலைக் கொடுத்து விடுகிறார்கள்.
தொடர்புக்கு: 63816 71712