/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவலிங்கபுரத்தில் காணாமல் போன வாய்க்கால்; கண்டுபிடித்தால் தீர்வு கிடைக்கும்
/
சிவலிங்கபுரத்தில் காணாமல் போன வாய்க்கால்; கண்டுபிடித்தால் தீர்வு கிடைக்கும்
சிவலிங்கபுரத்தில் காணாமல் போன வாய்க்கால்; கண்டுபிடித்தால் தீர்வு கிடைக்கும்
சிவலிங்கபுரத்தில் காணாமல் போன வாய்க்கால்; கண்டுபிடித்தால் தீர்வு கிடைக்கும்
ADDED : நவ 06, 2024 11:48 PM

கோவை ; ஒண்டிப்புதுார் சிவலிங்கபுரம் பகுதியில் மழைநீர் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதால், மழைநீர் செல்ல வழியில்லாமல் வீதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
கோவை ஒண்டிப்புதுார் ராமச்சந்திரா நாயுடு ரோடு, 3 வது ரயில்வே கேட் அருகில் சிவலிங்கபுரம் உள்ளது. இந்த பகுதியில் சூரியா நகர், கண்ணன் நகர், மீனாட்சி அம்மன் நகர் மற்றும் சக்திநகர் உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன. இங்கு, 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால், கனமழை பெய்யும் காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல், தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தெருவில் நடக்கவும், வாகனங்களில் செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.கடந்த ஒரு மாதமாக கோவையில் மழை பெய்து வருவதால், இந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இது குறித்து, அப்பகுதி மக்கள், 59 வது வார்டு கவுன்சிலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் மா.கம்யூ., சார்பில், நாற்று நடும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியை பார்வையிட்டு சரி செய்து கொடுப்பதாக கூறி, உடனே ரோட்டை சரி செய்யும் பணியை துவக்கி உள்ளனர். இதனால் நாற்று நடும் போராட்டம் கைவிடப்பட்டது.
காணாமல் போன வாய்க்கால்
இந்த பகுதியில் மழைநீர் தேங்க காரணம் என்ன என்பது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:
இங்கு உள்ள சிவலிங்க பிள்ளையார் கோவிலுக்கு பின்புறம் 15 அடி அகலத்தில் ஒரு வாய்க்கால் இருந்துள்ளது. இந்த பகுதியில் மழை பெய்யும் போது, மழைநீர் இந்த வாய்க்காலில் வடிந்து நொய்யலில் கலந்து விடும்.
அதனால் எவ்வளவு மழை பெய்தாலும் இங்கு தண்ணீர் தேங்காமல் இருந்தது. ஆனால் அந்த வாய்க்கால் இப்போது இல்லை.அந்த வாய்க்காலை முழுமையாக அங்கு உள்ளவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி விட்டனர். அதனால் மழைநீர் செல்ல வழியில்லாமல், ரோட்டிலும் வீதிகளிலும் தேங்கி நிற்கிறது.
அந்த வாய்க்காலை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டெடுத்து துார்வாரினால் மட்டுமே இந்த பகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.