/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
/
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
ADDED : அக் 06, 2025 12:09 AM

நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; பணிகள் விரைவில் துவங்கும்
கோ வை மாநகராட்சி மேற்கு மண்டலம், 41வது வார்டில் மருதமலை பிரதான சாலையையொட்டிய பி.என். புதுார், லிங்கனுார், ராம்ஸ் நகர், ஐஸ்வர்யா நகர், முல்லை நகர், தாகூர் வீதி, வீரமாச்சியம்மன் கோவில் வீதி உட்பட பல்வேறு பகுதிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
மருதமலை சாலையில் எப்பொழுதும் போக்குவரத்துக்கு பஞ்சம் இருக்காது. இங்குள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லிங்கனுார் பகுதியில் உள்ள பழைய தரைப்பாலத்தை விரிவுபடுத்தி தீர்வுகாண வேண்டும். லிங்கனுார், தாகூர் வீதி, புதுக்கிணறு வீதிகளில் யு.ஜி.டி. திட்டம் அமல்படுத்துதல் ஆகியன அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இணைப்பு சாலை தேவை
ஐஸ்வர்யா நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் கோபாலன்:
ஐஸ்வர்யா நகரில் இருந்து மருதமலை மெயின் ரோடு செல்லும் ரோடு மிகவும் குறுகியதாக(10 அடி) இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விவேகானந்தா நகர், பொன்னுசாமி நகர், சிவா நகர் ஆகியவற்றுடன் இணைக்கும் வகையில் ஐஸ்வர்யா நகர் ரோட்டை இணைக்க வேண்டும். நில ஆர்ஜிதம் செய்து இணைப்பு சாலை அமைத்தால் நெரிசல் ஏற்படாது.
பாலம் விரிவு
தேவராஜ் (ஆன்மிகவாதி): மருதமலை ரோடானது பண்டிகை, திருவிழா காலங்களில் போக்குவரத்து மிக்க பகுதியாக மாறிவிடுகிறது. இந்த நிலையில் பழைய மருதமலை ரோட்டில்(லிங்கனுார்) தரைப்பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.
இக்குறுகிய பாலத்தை விரிவுபடுத்தினால், மருதமலை திருவிழா காலங்களில் பிரதான சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, இந்த தரைப்பாலத்தை மாற்று பாதையாக பயன்படுத்த முடியும். முல்லை நகர், வக்கீல்கள் காலனி, வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் இப்பாலத்தை விரிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தரம் உயர்த்தணும்!
பாபு(சுயதொழில்): பி.என். புதுார் மாநகராட்சி உயர்நிலை பள்ளி மட்டுமே இங்குள்ளவர்களுக்கு மிக அருகே இருக்கிறது. இப்பள்ளி ஆரம்பப் பள்ளியாக இருந்து நடுநிலை பள்ளியாகவும், கடந்த, 1999ல் உயர்நிலை பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. நல்ல தேர்ச்சி விகிதம் உள்ள இப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்துவருகிறோம். இந்த பள்ளியை விட்டால், வடவள்ளி அரசுப் பள்ளி, மருதமலை தேவஸ்தானம் பள்ளிக்குதான் செல்ல வேண்டும். தனியார் பள்ளிகள்கூட இங்கு கிடையாது. இந்த மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்தினால் பலர் பயன்பெறுவர்.
துர்நாற்றம்
ரதிதேவி(இல்லத்தரசி): மருதமலை மெயின் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் முதல் லிங்கனுார் தரைப்பாலம் வரையிலான பிரதான சாக்கடை பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. பராமரிப்பின்றி ஆங்காங்கே சாக்கடை அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. நோய் பாதிப்புள்ள நிலையில் இப்பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் தீர்வுகாண வேண்டும்.
ஆக்கிரமிப்பு
நாகராஜ் (ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி): பைமெட்டல் ரோட்டில் இருந்து இரு கோவில்கள், பொது கழிப்பிடத்தை தாண்டிய பிறகு நான்கு முக்கு ரோடு வருகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவுபடுத்த வேண்டும். தனியார் இடம் இருந்தாலும் மாநகராட்சி நிர்வாகம் பேசி இடத்தை வாங்கி விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுகிய அந்த பாதையில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரிப்பதுடன், விபத்தும் அதிகரிக்கிறது.