/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறை ரோட்டில் ஒற்றை யானை உலா
/
வால்பாறை ரோட்டில் ஒற்றை யானை உலா
ADDED : டிச 23, 2024 10:11 PM

பொள்ளாச்சி; கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், யானை, மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஒற்றை யானை, ஆழியாறு - வால்பாறை ரோட்டில், சின்னாறுபதி, ஆழியாறு, கவியருவி பகுதியில் வலம் வருகிறது.
இந்த யானை, ரோட்டில் ஜாலியாக வாக்கிங் சென்று சில மணி நேரம் கழித்து வனப்பகுதிக்குள் செல்கிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் அச்சமடைகின்றனர். வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமையில், வனத்துறையினர், வேட்டை தடுப்புகாவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரோட்டில் உலா வரும் ஒற்றை யானையை, மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி வனச்சரகர் கூறியதாவது: ஆழியாறு வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது. ஆழியாறு அணைக்கு சென்று தண்ணீர் குடித்து மீண்டும் வனப்பகுதிக்கு செல்கிறது. இதுவரை யாரையும் யானை தொந்தரவு செய்யவில்லை. இருந்தாலும், அதன் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணியர், யானையை கண்டால் சப்தம் போடுவது, விரட்டுவது, போட்டோ, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. யானை நடமாட்டம் உள்ளதால் கவனமாக செல்ல வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.