ADDED : மார் 14, 2026 06:29 AM

பெ.நா.பாளையம்... துடியலுார் அருகே சின்னதடாகம் மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளில், மாட்டு சாண வறட்டியை, எரிபொருளாக பயன்படுத்துகின்றனர்.
நன்கு நின்று எரியும் தன்மை கொண்டதால், பலர் இதை வாங்கி செல்கின்றனர்.
சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், விறகுடன் பலர் வறட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தற்போது ஒரு மாட்டு சாண வறட்டி, 5 முதல், 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, சின்னதடாகத்தை சேர்ந்த விவசாயி ஜெயபிரகாஷ் கூறுகையில், ''இது பாரம்பரிய எரிபொருள். தமிழக கிராமப்புறங்களில் சமையலுக்கும், பூஜைக்கும், வேளாண் பயன்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், கொசு விரட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிராமங்களில் குறைந்த செலவில் இயற்கையாக கிடைக்கும் சிறந்த எரிபொருள் எனலாம்'' என்றார்.
மாட்டு சாண வறட்டி விற்பனை செய்யும் நபர்கள் கூறுகையில், 'வறட்டி தயாரிக்க கன்றுக் குட்டிகளின் சாணம் உகந்தது. அவை பெரும்பாலும் புற்களை மட்டுமே உண்பதால், அதை அனைத்து பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும்.
சமையல் தவிர, மாட்டு சாண வறட்டி வாங்கி செல்பவர்கள், சாணம் கிடைக்காத சூழலில், விழா காலங்களில் வறட்டியை தண்ணீரில் கரைத்து வாசல் தெளிக்க பயன்படுத்திக் கொள்கின்றனர்.
செடிகளுக்கு இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம். தற்போது நவநாகரிக காலம் என்பதால், மாட்டுச்சாணத்தை வட்டவடிவமாக தட்டி வைக்க, சுவர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது' என்றனர்.
