/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரைபுரண்டு ஓடிய ஆற்றை கடக்க முயன்ற காட்டு யானை
/
கரைபுரண்டு ஓடிய ஆற்றை கடக்க முயன்ற காட்டு யானை
ADDED : ஜூன் 17, 2025 11:00 PM

தொண்டாமுத்தூர்; செம்மேட்டில், தொடர் கனமழையால், கரைபுரண்டோடிய ஆற்றில் இறங்கி, ஒற்றைக் காட்டு யானை ஆற்றை கடக்க முயன்றது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், தற்போது, 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.
இந்த யானைகள், இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை உண்டுவிட்டு, பின், காலையில், மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கின்றன.
இப்பகுதியில், தினசரி காட்டு யானைகள், விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த, 4 நாட்களாக, தொடர் கனமழை பெய்து வருவதால், நொய்யல் ஆறு மற்றும் அதன் நீர் ஆதார ஓடைகளில், நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று அதிகாலை, பூண்டி வனப்பகுதியில் இருந்து, வெளியேறிய யானை, விளை நிலங்களுக்குள் புகுந்து, நேற்று காலை, 8:00 மணிக்கு, செம்மேடு, பள்ளிக்கு பின்புறம் உள்ள நொய்யல் ஆற்றின் கரைக்கு வந்தது.
ஆற்றில், நீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த நிலையில், ஆற்றுக்குள் இறங்கி, மறுகரைக்கு செல்ல முயற்சித்தது.
ஆற்றில் இறங்கி, சிறிது தூரம் சென்றபோது, நீர் வரத்து அதிகரித்ததால், மறுகரைக்கு செல்ல முடியாமல், இறங்கிய பகுதியில் சிறிது தூரம் முன்னே சென்று, அதே பக்க கரையில் ஏறி, அருகிலிருந்த தோட்டத்திற்குள் புகுந்து சென்றது.