ADDED : மார் 23, 2026 09:56 PM
அன்னுார்: வறட்சியால், விவசாயிகள் கிணற்றுக்கு தண்ணீர் வாங்கி ஊற்றுகின்றனர்.
அன்னுார் வட்டாரத்தில், தென்னை, வாழை, கரும்பு, மஞ்சள், சோளம், சிறுதானியங்கள் என, 20 ஆயிரம் ஏக்கருக்கு பயிர் செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் கிணற்று பாசனமும், சில இடங்களில் மானாவாரியாகவும் பயிர் செய்யப்படுகிறது. தற்போது நிலவும் வறட்சியால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயப் பயிர்கள், தென்னை மரங்கள் வாடுகின்றன.
பொகலுாரை சேர்ந்த விவசாயிகள், தண்ணீர் லாரிகளை வாடகைக்கு பேசி வாங்கி கிணற்றில் தண்ணீர் ஊற்றி, மோட்டார் வாயிலாக எடுத்து தென்னை மரங்களுக்கு பாய்ச்சுகின்றனர். மங்காபாளையம், பெரியபுத்துார், சாலையூர், கதவுகரை உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் அறுவடை செய்யும் காலம் நெருங்கிவிட்டது. ஈரப்பதம் இருந்தால், மஞ்சள் அறுவடை எளிதாக இருக்கும் என்பதால், தோட்டங்களில் லாரி தண்ணீர் வாங்கி ஊற்றி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், '12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீர் வாடகைக்கு, 2,000 ரூபாய் வரை ஆகிறது. ஒரு ஏக்கர் மஞ்சளுக்கு ஐந்து லோடு லாரி தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. ஏற்கனவே விதை மஞ்சள், விதைப்பு கூலி, களை எடுத்தல், உரம், பூச்சி மருந்து, அறுவடை செலவு என அதிக அளவில் ஆகிறது. நீருக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது' என்றனர்.
