/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி; தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
/
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி; தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி; தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி; தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : டிச 02, 2025 06:27 AM
பொள்ளாச்சி: கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டும், முன்னேற்றம் காணவில்லை என்பதால், வாரம்தோறும் ஆசிரியர்களுடன் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, ஆசிரியர்கள் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அவ்வாறு இருந்தும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வந்தாலே தேர்ச்சி என்ற நிலை இருப்பதால், பலர், அடிப்படை கல்வி அறிவு கூட இல்லாமல் உள்ளனர்.
மாணவர்கள் சிலர், ஒன்பதாம் வகுப்பு முன்னேறியுள்ள நிலையிலும், எழுதவும், வாசிக்கவும் தடுமாறுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், நடப்பு கல்வியாண்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, 'திறன் மாணவர்கள்' என்ற இயக்கத்தின் பேரில், கற்றலில் பின்தங்கியவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திறன் இயக்கத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், தேர்வு முடிவுகளின் அடிப்படையில், அதிகப்படியான மாணவர்கள் இன்னமும் அடிப்படை கற்றலில் தேர்ச்சி அடையவில்லை என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த கல்வியாண்டில் திறன் இயக்கம் முடிவடைவதற்குள், அடிப்படை கற்றல் விளைவுகளில் மாணவர்கள் தேர்ச்சி அடைவதை உறுதி செய்ய வேண்டும், என, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்ட திறன் மாணவர்கள், தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெற இன்னமும் கூடுதல் கால அவகாசம் தேவை என, கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளி தலைமையாசிரியர்கள், திறன் வகுப்புகள் சரியான கால அட்டவணைப்படி நடைபெறுவதை உறுதி செய்து, வாரம்தோறும் ஆசிரியர்களுடன் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, பள்ளிகளில் ைஹடெக் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகளை பயன்படுத்த வேண்டும். மாதாந்திர மதிப்பீட்டின் முடிவுகளை ஆராய்ந்து, அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல, ஆய்வு அலுவலர்கள், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகளை 'பள்ளிப்பார்வை' செயலி வாயிலாக அறிந்து, வாரத்தில் இரு நாட்கள், நேரடியாக பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.

